அன்புள்ள அம்மாவுக்கு..!

அன்புள்ள அம்மாவுக்கு.. 

ஜாக்கி எழுதிக் கொள்வது...!

உனக்கு இன்னைக்கு திவசம். நீ எங்களையெல்லாம விட்டுப் போயி எப்படியும்  பதினைஞ்சு வருசத்துக்கு மேல இருக்கும். நான் சொன்ன கணக்கு தப்பாக்கூட இருக்கலாம்.. கிருஷ்ணர் சொன்னதுபோல நான் மறந்தால் அல்லவா, உன்னை நினைப்பதற்கு.. ஆனாலும் அம்மா.. இன்று உனக்கு திவசம்.


உன்னை ஞாபகப்படுத்தும் கணங்கள் நிறைய. நினைத்துப் பார்க்கும் நினைவுகளில் உன் நினைவுகள் என்றும் எனக்கு இனிமையானவைதான்.

படிக்காத அப்பா. பியூசி படித்த நீ. அதனால் உனக்கு கல்வியின் அருமை தெரிந்திருக்கிறது. அதனால்தான் ரேஷன் அரிசி சாப்பிட்டாலும், மதியம் சத்துணவு சாப்பிட்டாலும் எங்களைப் பள்ளிக்கு அனுப்பிய பரோபகாரி நீ. ஐந்து பிள்ளைகளும் ஒரு சேர பள்ளிக்கு அனுப்புவது என்பது எவ்வளவு பெரிய இம்சை என்பதை இன்றைய சென்னையில் நானும் என் மனைவியும் வேலைக்கு கிளம்பும்போதுதான் உணர்கின்றோம். 

எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி தினமும் எங்களை பள்ளிக்கு அனுப்பியது ஒரு இமாலய சாதனைதான்….இப்போதுகூட அப்பா சில நேரங்களில் எரிச்சல் ஏற்படுத்துவது போல பேசினாலும்.. எங்கள் ஐந்து பேரையும் பக்கத்து வீட்டுக்கு போய் தலை சொறிந்து எந்தக் காலத்திலும் ஒரு டம்ளர் சர்க்கரை கேட்க வைத்ததில்லை. அதனால்தான் அப்பாவின் பேச்சுகளை நிறைய சகித்துக்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது.

அப்பாவின் சொற்ப சம்பளத்தில் அடுத்த வீட்டு வாசப்படிக்கு அனுப்பாமல் எங்களை படிக்க வைத்து ஆளாக்கியவள் நீ…

ரகுமான் பாடிய வந்தேமாதரம் பாட்டில் அந்த பாடலை எப்போது கேட்கத்  தோன்றினாலும் என்னை மார்போடு அணைத்தாய். என்னை ஆளாக்கி வளர்த்தாய். சுகவாழ்வொன்று கொடுத்தாய். பச்சை வயல்களை பரிசளித்தாய். பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய் என்று பாரதத் தாயைப்  பற்றி உருகுவதாய் அந்த பாடல் இருந்தாலும்… எனக்கு அந்த வரிகள் உன்னைத்தான் நினைவுபடுத்தும். கண்களில் நீர் கொள்ள செய்யும்.

என்னைப் போல் மக்கு பிள்ளையை பெற்று நீ வருந்தாத நாள் இல்லை. என்னைப் பொறுத்தவரை விளையாட்டில், டிவியில் இருந்த ஆர்வம் படிப்பில் சுத்தமாக இல்லை. அதில் உனக்குத்தான் எவ்வளவு வருத்தம்? அதைப் பற்றி கிளிப் பிள்ளைக்கு சொல்வது போல தினமும் எனக்கு வகுப்பெடுப்பாய்..!

ஒரு பிள்ளை வளர சர்வநிச்சயமாய் சூழ்நிலை ஒரு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று நினைத்து, என் வயதில் என்னைச் சுற்றியிருக்கும் அத்தனை பசங்களும் கோலியும், கோட்டியும் விளையாடி படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்க… நான் உருப்பட வேண்டும் என்று கனவு கண்டவள்  நீ…!

நீ அப்பாவிடம் சொன்னாய் "அவனை ஹாஸ்டலில் சேர்த்து விடுங்கள் "என்று! ஒரே பிள்ளை.. உனக்கு நான்தான் ராசா… உனக்கு நான்தான் உலகம்… என் அருகாமை உனக்கு மிக முக்கியம். என் உடல் வெப்பம் அறியாது நீ ஒரு நாளும் உறங்கியது இல்லை…. என் மீதான வருத்தம் நான் படிக்கவில்லை என்பது ஒன்றுதான்.

நான் ஒண்ணாவது படிக்கும்போது பாப்பாத்தி டீச்சரிடம் டியூஷன் சேர்த்துவிட்டாய். ஏ பி சி தப்பாக எழுத, அன்று மாலை என்னை டியூஷனில் இருந்து அழைத்து போக வந்தபோது என் கல்வி நிலை குறித்து பப்பாத்தி டீச்சரிடம் கவலை கொண்டாய். அப்போது டீச்சர் சொன்னது இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கின்றது.

"ஏம்மா ஜெயா.. உன் புள்ளை என்ன ஐ.ஏ.எஸ். எக்சாமா எழுதிட்டான்.? இப்படி வருத்தப்படுற…! இப்பத்தானே ஒண்ணாவது படிக்கிறான்…" என்று டீச்சர் உன்னைச் சமாதானபடுத்தியது எனக்கு இன்றும் என் ஞாபக அடுக்குகளில்….

அம்மா இப்போது இருக்கும் பல அம்மாக்கள்.. எல்.கே.ஜி. படிக்கும்போதே கவலை ஆகின்றார்கள்… என்ன செய்ய?

அம்மா, அப்பா எப்போது என் படிப்பை நக்கல் விட்டாலும் களவானி சரண்யா போல் "ஆனி போய் ஆவணி வந்தா அவன் டாப்புல வருவான்" என்று சொல்வது போலவே என்னை அப்பாவிடம் விட்டுக் கொடுக்காமல் வாதாடுவாய்….உனக்கு தெரியும் நான் ஒன்றும் அப்படியொரு  புத்திசாலி பிள்ளை இல்லையென்று…! இருந்தாலும் நான் பெத்தது இந்த சமுகத்துல ஒரு ஓப்ளஸ் கேஸா இருக்கக்  கூடாது என்று பயங்கரமாக பகீங்கரப் பிரயாத்தனம் செய்து என்னை முன்னேற்ற  வேண்டும் என்று பாடுபடுவாய்….

எனக்கு நீ கணக்கு சொல்லிக் கொடுத்த கதையை நினைத்தால் இன்றும் எனக்கு சிரிப்பு வருகிறது…. தாயம், ஏழுகாய், புளியாங்கொட்டை என்று எது விளையாட ஆரம்பித்தாலும் அதில் எனக்கு கணக்கு சொல்லித் தந்தாய்.. இன்னமும் எனக்கு 4-ம், 3-ம் ஏழு என்று சட்டென எனக்குச் சொல்ல வராது. "ஏழ மனசுல வச்சிக்க. அதுல 3 கழி.. மிச்சம் இப்ப எத்தனை?" என்று கேள்வி கேட்டு என் உயிரை வாங்குவாய்..!

இது கூட பராவாயில்லை.. அப்ப பிரிட்டானியா கம்பெனி பிஸ்கட்டில் குருவி, யானை, காக்கா போன்ற உருவங்களில் பிஸ்கெட் விற்கும்.. இப்போதும் அது வருகின்றது என்று நான் நினைக்கின்றேன்… அதில்கூட உன்கிட்ட "பத்து யானை பொம்மை இருக்கு. அதுல அம்மா 4 எடுத்துகிட்டா ,உன்கிட்ட எத்தனை மிச்சம் இருக்கு..?" என்று நீ எனக்கு கணக்கு சொல்லி கொடுக்க முயற்சிக்க… "கொடுத்த பத்துல இந்தச் சனியன் 4 எடுத்துக்கிச்சி… அது நமக்கு கெடைக்குமா? இல்லை இவளே தின்னுருவாளோ..?" என்று என் மனதில் கேள்வி போய் கொண்டு இருக்கும்… அப்புறம் எப்படி பதில் வரும்…..?

"கண்ணுக்கு எதிர பத்துல 4 எடுத்துக்கிட்டா மிச்ச பிஸ்கெட்டை எண்ணி ஏழுன்னு சொல்லத் தெரியலை.." என்று வருத்தபடுவாய்.. பக்கத்தில் இருக்கும் அடுப்பு எறிய வைக்கும் சவுக்கு மிளாரில் என் உடம்பில் புகுந்து விளையாடுவாய்… எட்டாவது படித்து விட்டு கம்மியம்பேட்டை செயிண்ட் ஜோசப்பில் என்னை சேர்க்கின்றாய்…..

நான் ஆறு, எழு, எட்டு வகுப்புகளில் நான் பாடம் படிக்கவில்லை. பள்ளியை அப்போதுதான் கட்டிக் கொண்டிருந்தார்கள்..,நாங்கள் பெரிய பையன்களாக இருந்த காரணத்தால் ஓடு எடுக்கவும்,  மண் சுமக்கவும் பயன்படுத்தப்பட்டோம்.

ஒன்பதாம் வகுப்பு… புதிய வகுப்பு சூழல் என்னைவிட எல்லோரும் கெட்டிக்காரர்கள் ஆக இருக்கிறார்கள். அல்ஜீப்ராவை அப்போதுதான் கேள்விப்படுகின்றேன்… அல்ஜீப்ரா கண்டுபிடித்த பொறுக்கியை ஓட ஓட விரட்டி மூஞ்சில் குத்த வேண்டும் என்ற வெறி. ஒன்பதாம் வகுப்பையே  அடுத்த வருடமும் படிக்க சொல்லிவிட்டார்கள். பெரிய அசிங்கம்.. ஆனால் என்னைவிட அதிகம் வெளியே தலைகாட்ட அசிங்கபட்டவள் நீ.

பத்தாவது போனேன்… அதாவது நான் பத்தாவது பாஸ் பண்ண வேண்டும் என்று என் மீது நம்பிக்கை வைத்தாய்…. முத்துக்குமாரசாமி வாத்தியாரிடம் டியூஷனை வைத்தாய்…..ரிசல்ட் வந்தது… 500க்கு 277. நான் வருத்தபட்டேன்.. என்னோடு படித்த என் நண்பன் 300க்கு மேல். ஆனால் நீ ஆனந்த கூத்தாடினாய்.

அப்படியே பதினோராம் வகுப்பு பி குருப்… ஒரு எழவும் புரியவில்லை… படிப்பில் அர்வம் குறைந்தது.. நம்ம வீட்டுச் சூழல்.. வேலைக்குப் போக தீர்மானித்தேன்…..பதினோராம் வகுப்பு பாஸ் செய்து சர்டிபிகேட் உடன் வீடு வந்தேன்…

அப்புறம் நிறைய டிராவல் ஆகி ஒரு கட்டத்தில் கல்லுரியில் வேலை   செய்யும்போது மீண்டும் படிக்கும் ஆர்வம் துளிர்விட்டது… அப்போதும் உன்னைதான் நினைத்துக்கொண்டு அஞ்சல் வழியில் பி.ஏ. படித்தேன்… இப்போது எம்.ஏ. படித்து எந்த அரியர்ஸும் இல்லாமல் பாஸ் செய்து விட்டேன்.

மற்றவர்களுக்கு அது எழு கழுதை வயதில் எம்.ஏ. ஆனால் இது எனக்கு எப்படிப்பட்ட விஷயம் என்பதைவிட, உனக்கு அது எத்தகைய சந்தோஷம் என்று எனக்குத்தான் தெரியும்.. நம் பரம்பரையில் உன் பையன்தான் முதல் மாஸ்டர் டிகிரி. இந்தப் பெருமை உனக்கு போதும்மா..!

வெள்ளிக்கிழமைதான் யூனிவர்சிட்டியில் இருந்து சர்ட்டிபிகேட் வந்தது… அதனை கையில் வாங்கியபோது என் கண்ணில் ஆனந்த கண்ணீர்… அப்ப நான் உன்னைத்தான்டி நினைச்சிக்கிட்டேன்….. சனியனே.. அல்பாயிசில் போய்த் தொலைஞ்சவளே…. நீ  மட்டும் இருந்து இருந்தா…?

உன் மருமகளை டிவி பார்க்க வச்சிப்புட்டு, நாம ரெண்டு பேரும் பைக்கில் ஜாலியா மெரினா பீச்சுக்கு போய், அப்படியே எக்ஸ்பிரஸ் மாலின் பிரம்மாண்டத்தை காட்டிட்டு அப்படியே இரண்டு சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்டுவிட்டு, அங்கு வரும் பெண்களின் உடை மாற்றத்தை பார்த்து நீ அதிசயித்துவிட்டு, வீட்டில் வண்டி நிறுத்தும்போது ஏதோ பேசியபடி வந்து அப்படியே நெற்றியில் பத்தாவது பாஸ் செய்த போது ஒரு முத்தம் கொடுத்தாயே… அது போல் நிச்சயம் இப்போதும் எனக்குக் கொடுத்து இருப்பாய்….!

ஆனாலும் அந்த சர்ட்டிபிகேட் என் கையில் வந்த போது, நான் நீ எனக்கு முத்தம் கொடுப்பதாய் நினைத்துக்கொண்டேன்.. நெற்றியில் எச்சில் ஈரத்தை நான் உணர்ந்தேன்…..

அம்மா... நான் இன்னும் பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை… இன்னும் என் தேடல் ஓடிக் கொண்டே இருக்கின்றது…என் வாட்டத்தைப் போக்கி, ஓட்டத்தைத் துரிதப்படுத்தி எனக்கு நிச்சயம் நல்வழி காட்டுவாய் என்ற நம்பிக்கையுடன்..

எப்போதும் அப்பாவுக்கு நான் மக்குப் புள்ளை…

உனக்கு நான் தனுசு ராஜா….

பிரியங்களுடன்

உனது மகன்
தனசேகரன் (எ) ஜாக்கிசேகர்


53 comments:

  1. நீங்க நிச்சயம் பெரிய ஆளாக வருவீங்க ...

    ReplyDelete
  2. Amazing man!!
    This can't get any better to express your love, affection and respect towards your mother.

    You will be, whatever you (and your mother) want you to be .

    Congrats on your M.A!!

    Thanks
    Arul

    ReplyDelete
  3. பின்னூட்டம் போடாம இருக்கிற விரதத்தை உங்க பதிவு உடைச்சிகிட்டே வருதுங்க ஜாக்கி. உங்க மனசுல இருக்கிற பாரத்தை இறக்கி எங்க மனசுல ஏத்திட்டியே... போய்யா

    ReplyDelete
  4. Dear Mr. Jackie,
    I have no words to say. Amma intha mannai vittu pirinthalum ungalai vittu pirayavialli. Amma ungalai eppothum ninaithu kondu than irukirargal.
    I know the pain, my dad expired before two years. 14-09-2010 andru second thivasam padachom, i felt a lot.....

    Take Care,
    Vijay,
    Muscat.

    ReplyDelete
  5. கண்களை கலங்க வைக்கிறிர்கள் ஜாக்கி.. நெகிழ்வான் பதிவு...

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஜாக்கி... என் தாயையும் ஞாபகபடுத்தியதற்கு... கண்ணில் நீர்வர துடித்தது...

    ReplyDelete
  7. ஒரு மகன் தாய்நிடம் கொண்ட பாசம் எல்லை அற்றது.
    தலைவரே கண்ணுல தண்ணீ வந்துடுச்சு.

    ReplyDelete
  8. சிற‌ப்பாக‌ எழுதியிருக்கிறீர்க‌ள். நிச்ச‌ய‌ம் உங்க‌ள் அம்மா உங்க‌ளுடைய‌ வ‌ள‌ர்ச்சி க‌ண்டு ம‌கிழ்வார், இவ்வுல‌கில் இல்லாவிடினும். உங்க‌ள் த‌க‌ப்ப‌னாரிட‌ம் ம‌ன்னிப்பு கேட்டு ஒரு ப‌திவிட்டிருந்தீர்க‌ள், ப‌ல‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு. அதையும் ந‌ன்றாக‌ எழுதி இருந்தீர்க‌ள். MA ப‌ட்ட‌ம் பெற்ற‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்.

    Krishnamoorthy

    ReplyDelete
  9. மனசு வலிக்குது ஜாக்கி ! என்ன சொல்றதுன்னு தெரியல...

    ReplyDelete
  10. நீங்கள் உங்கள் அம்மாவை நினைத்து எழுதிய இந்த பதிவை படிக்கும் எனக்கு என்னுடைய அம்மாவின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. மிகவும் முத்தான பதிவு ஜாக்கி.

    ReplyDelete
  11. நிச்சயம் நல்வழி காட்டுவாய் என்ற நம்பிக்கையுடன்.

    ReplyDelete
  12. ப‌ட்ட‌ம் பெற்ற‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்
    பாசாங்கில்லாத பதிவு

    ReplyDelete
  13. பாஸ்... படிக்கிறதுக்கு வயசு எது... நான் கணினியில் என்னோட முதுகலை பட்டம் படித்த போது என்னோடு மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஆங்கில துறையின் தலைவரும் படித்தார்... அப்போது அவருக்கு வயது என்னவென்றால், எங்களது இறுதி ஆண்டில் இருந்து இரண்டாண்டுகளில் பணி ஓய்வு பெறுகின்ற வயது... அவர் என்ன சொன்னார் தெரியுமா??? "இப்போ நான் படிக்கின்ற இந்த படிப்பு நான் பணி ஓய்வு பெற்ற பின்பும் நான் இப்போது பெறுகின்ற வருமானத்தை விட அதிக வருமானம் பெற்று தரும்" என்பது தான்... பணி ஓய்வுக்கு பின்பும் பணம் பண்ண படித்த அவரை விட உங்களது படிப்பு ஆர்வம் ஒன்றும் குறைந்ததில்லை...

    ReplyDelete
  14. வாழ்த்துகள் ! ! ! முதுகலை பட்டம் பெற்றதற்கு ! ! ! இனிமேல் ஜாக்கி எம்.ஏ......

    ReplyDelete
  15. என்ன சொல்வதென்று தெரியவில்லை ஜாக்கி. உங்கள் அன்னையின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு மேன்மை தரும்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் அண்ணே.... ஈன்ற பொழுதினும் நிச்சயம் உங்க அம்மா பெருமைபடுவாங்க. தப்புணே .. பட்டிருப்பாங்க.

    ReplyDelete
  17. நெகிழ்ச்சியாக இருந்தது பதிவு.மெலும்,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. எனக்கு என்ன சந்தோஷம்னா... இப்ப உயிரோடு இருக்கும் அம்மாக்களை இன்னும் கொஙசம் கூடுதல் கவனம் எடுத்து பார்த்துப்பாங்க....

    நாம எல்லோருக்குமே என்ன பிரச்சனைன்னா.. வளர்ந்ததும் கடந்த காலத்தை மறந்து விடுகின்றோம்... அது போல் இல்லாமல் இந்த பதிவு பலரது அம்மாவை அப்பாவை நினைவுபடுத்தும் என்பதில் ஜயம் இல்லை...

    இளா உனது பின்னுட்டம் நச்சென இருந்தது... அதே போல் வித்யாசமான கடவுளுடையதும்... மற்றபடி அவர்வர் உணர்வுகளை தெரிவித்தமைக்கு என் நன்றிகள்...

    ReplyDelete
  19. என்ன அழவச்சுட்டய்யா....

    ReplyDelete
  20. உங்கள் தாயாரின் ஆசிர்வாதத்தால் நீங்கள் எந்த அரியர்ஸ்சும் இல்லாமல் பாஸ் ஆகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன், என் தாயாரும் இறந்து 4 மாதம்தான் ஆகிறது, கண் கலங்க வைத்து விட்டீர்கள், நெகிழ்ச்சியான பதிவு, நன்றி

    ReplyDelete
  21. கண்டிப்பாக அம்மாவின் மேல் மிகுந்த பாசம் வைத்திருக்கும் அனைவரும் இதை படிக்கும் போது கண்கலங்கும் .... வாழ்த்துக்கள் சார் உங்க M.A.வுக்கு...

    ReplyDelete
  22. //அப்ப நான் உன்னைத்தான்டி நினைச்சிக்கிட்டேன்….. சனியனே.. அல்பாயிசில் போய்த் தொலைஞ்சவளே…. நீ மட்டும் இருந்து இருந்தா…? //


    இதுதான் எனக்கும் ஜாக்கி.

    ReplyDelete
  23. அம்மாவை நானும் இழந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன தங்களின் பதிவு மீண்டும் கண்களில் நீர் வர வைத்துவிட்டது
    அன்புடன்
    நெல்லை நடேசன் \
    துபாய்

    ReplyDelete
  24. "கண்ணுக்கு எதிர பத்துல 4 எடுத்துக்கிட்டா மிச்ச பிஸ்கெட்டை எண்ணி ஏழுன்னு சொல்லத் தெரியலை.." என்று வருத்தபடுவாய்..

    ReplyDelete
  25. சார் நீங்க டாப்பா வருவிங்க,சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. நல்லா இருய்யா...

    அன்பு நித்யன்

    ReplyDelete
  27. சூப்பர் நைனா கலங்க வெச்சுட்ட

    ReplyDelete
  28. we are lucky to born in same generation of mothers, all the comments above showing them. anyhow let us pray for our each and every person of future generations to get such a mother. to brought up like me, you and all.

    ReplyDelete
  29. அம்மா அப்பாவின் அருமை நாம் பெற்றோராக மாறும் போதுதான் தெரியது...

    ReplyDelete
  30. இதே புரட்டாசி மாதத்தில் மறைந்து போன என் அம்மாவுக்கும் சேர்த்து இந்தப் பதிவு.
    நன்றியுடன்.

    ReplyDelete
  31. தரமான பகிர்வு.
    தாயின் உணர்வுகளில் அழகாய் இசை மீட்டியுள்ளீர்கள்.

    நன்றி.

    ReplyDelete
  32. விழியோரம் ஒரு துளி கண்ணீர்..... இந்த பதிவின் வெற்றி...

    ReplyDelete
  33. அண்ணே
    இன்னொரு ஒருவருடமும் ஓடிடுச்சே!!!:(
    என் அம்மாவும் போய் வரும் ஏப்ரல் வந்தா 4வருஷமாகுது,இருக்கும்போது திட்டுமட்டுமே வாங்கினார்கள்,போனபின்னர் தான் அருமை தெரியுதுண்ணே,அம்மாவின் ஆசிர்வாதம் தெயவத்தின் ஆசிர்வாதத்தை விட உசந்தது,அது உங்களுக்கும் எனக்குமுண்டு.
    ====
    நானும் அல்ஜீப்ரா கண்டுபிடிச்சவனை பொலிபோட துடிச்சேன்,என்கிட்ட எவ்ளோ திட்டு வாங்குனானோ?அவன்,தவிர கணிதமேஜை ராமானுஜத்தையும் தாருமாறா வைஞ்சிருக்கேன்,கொசுவத்தி சுத்துவது தான் எவ்வளவு சுகம் அண்ணே.

    ReplyDelete
  34. அண்ணே அம்மாவே உங்களுக்கு மகளாய் பிறப்பார்கள்,கவலை வேண்டாம்

    ReplyDelete
  35. 'ஜாக்கி' என்று முன்னொட்டியுள்ள பெயரிலேயே உங்கள் குழந்தைத்தனம் தெரிகிறது; எம்.ஏ. தேரியதற்கு ஆடுகிற ஆட்டத்திலும்.

    உணர்வுகளைத் துல்லியமாகக் கொண்டுதந்திருக்கிற நல்லதொரு எழுத்துநடை. சினிமாக் கதைகளில் வரும் 'ஈகோ ட்ரிப்' போல இருக்கிறது உங்கள் கல்விக் கதை.

    வாழ்க!

    ReplyDelete
  36. சிறந்த பதிவு ...

    ReplyDelete
  37. ஜி....

    பெற்றோரின் ஆசிகளை கொண்டு நீங்கள் வாழ்வில் பெரிய நிலையை அடைவீர்கள் என்பது உறுதி...

    அம்மாவின் ஆசி உங்களுக்கு பூரணமாக உண்டு...

    உணர்வு பூர்வமான கட்டுரை...

    படிக்க ரொம்பவே நெகிழ்வு...

    ReplyDelete
  38. முதலில் அதிஷாவிற்கு நன்றி - ட்விட்டரில் லிங்க் குடுத்து இந்த அற்புதமான பதிவை வாசிக்க வைத்ததற்கு. நெழிச்சியான பதிவு தனசேகர். உங்கள் அம்மாவின் ஆசி உங்கள் ஆயுசு முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கும். அம்மாக்கள் அப்படித்தான் ;)))

    ReplyDelete
  39. Hi Sekar,

    Nice essay about mother.Please sit and thing about your father .Forgot his negative activity and remember his positive activity above you.Please write about father also with positive points

    ReplyDelete
  40. அருமை....அம்மாவின் அருமை! ஒவ்வொரு எழுத்திலும்.
    உங்களுக்கு கடிதம் போட்ட பாரிஸ் லிங்கம் என் 25 வருட நண்பர்...தம்பி போல். தன்னைத் தன் தாயார்
    புரிந்து கொள்ளவில்லையென வருந்துபவர்.

    அவர் அம்மாவையும் நான் அறிவேன்."ஊருக்கு ராசாவானாலும் தாய்க்குப் பிள்ளை" என கருதிக் கருகும்
    வகையினர்.

    ReplyDelete
  41. சர்டிஃபிக்கேட் நீங்கள் வாங்கியதை கண்டிப்பாக உங்கள் அம்மா பார்த்து பூரித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

    ReplyDelete
  42. "இப்போது எம்.ஏ. படித்து எந்த அரியர்ஸும் இல்லாமல் பாஸ் செய்து விட்டேன்"
    ஜாக்கி கண்டிப்பாக அம்மா உங்களுக்கு முத்தம் அளித்திருப்பார்கள் நான் உணர்ந்தேன்.உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் உங்களையும் என்னையும் என்னை போன்ற சிலரையும் உங்களுடன் இணைத்ததே உங்கள் அம்மா பற்றிய முதல் பதிவுதான் இன்றும் பசுமையாக நினைவு கூர்கிறேன் (உங்கள் அம்மாவின் ரோஷமான அம்மாவையும் சேர்த்து நினைவு கூர்கிறேன் ) நெகிழ்ந்து கூழாக உருகி நிற்கிறேன் ஆகவே வாழுகின்ற இந்நாட்களில் மென்மேலும் என் தாயை நேசிக்கிறேன் சிற்சில பிரட்சினைகள் இருந்தாலும். எனக்கு தெரிந்து உங்கள் அம்மா உங்களுடன் உங்கள் ஒவ்வொரு அசைவிலும் உங்களை ரசிக்கிறார் ரசித்துகொண்டிருக்கிறார்.அட போப்பா இப்படி அழ வெச்சிட்டியே?.நன்றி ஜாக்கி.

    ReplyDelete
  43. //"கண்ணுக்கு எதிர பத்துல 4 எடுத்துக்கிட்டா மிச்ச பிஸ்கெட்டை எண்ணி ஏழுன்னு சொல்லத் தெரியலை.." என்று வருத்தபடுவாய்..//

    பத்துல நாலு எடுத்திட்டா மிச்சம் ஆறு அண்ணே.பிள்ளைத் தப்பாய் சொன்னாலும் பரவாயில்லை ஏதோ ஒரு விடை சொன்னா போதும் நினைக்கிற அம்மா.

    இது நீங்க செஞ்ச டைப்பிங் மிஸ்டேக்காக இருந்தாலும் நல்லா பொருந்தி வருது.

    ReplyDelete
  44. நெகிழ்ச்சியாக இருந்தது பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. ஜாக்கி , நீங்க வாழ்கையில் ஜெயிக்கவில்லை என்று சொல்லாதிங்க ..இதனை பேர் நெஞ்சில் உங்கள் இடுகை இவ்வளவு பாதிப்பு ஏற்படுத்திவிட்டதே !!! உங்கள் அம்மாவின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு.

    ReplyDelete
  46. Very touching. I am certain that both your mother and father are proud of your accomplishments so far.

    Congratulations on your M.A.

    Regards
    Bala

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner