MARINA-2012/உலகசினிமா/இந்தியா/தமிழ்/மெரினா திரைவிமர்சனம்

 

சென்னையில் எனக்கு அதிகம் சம்பந்தம் உள்ள இடம் எது என்றால் அது நிச்சயமாக மெரினாவை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.. இன்று சொந்த வீட்டில் வெர்டிப்பைடு டைல்ஸ்இல் படுத்து உறங்கினாலும்...


1994ல்ஆறுமாத காலம்  மெரினாவின் பிளாட்பாரத்தில் மேரிபிஸ்கட் அட்டையை விரித்து போட்டு உறங்கியவன் நான்.. மெரினாவின் நல்லது கெட்டது எனக்கு அத்தனையும் அத்துப்படி....சரியாக சொன்னால் மெரினா எனக்கு தாய் மடி போல...


திக்கற்று அனாதை போல திரியும் வெளியூர்வாசிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடம் அன்னை மெரினாதான்..

கையில் காசு பரம்பைசா இல்லையா.. மெரினாவில் அனாதை போல அடுத்த வேலை சோத்துக்கு சிங்கி அடிக்கிறியா? கவலையேபடாத.. காலையில ஒன்பது மணிக்குள்ள 50 ரூபாய் சம்பாதிக்க வழி சொல்லித்தரேன்...

வயத்தக்கழுவனும், நேர்மையா இருக்கனும் ஆனா அசிங்கம்பார்க்ககூடாது அப்படி இருந்தா? நான் சம்பாதிக்க வழி சொல்லித்தரேன்.

காலையில ஒரு ஆறுமணிக்கு எழுந்துக்கோங்க ஒரு சாக்கு பை எடுத்துகிட்டு கலங்கரை விளக்கத்தில் இருந்து கண்ணகி சிலைவரை நடந்திங்கன்னா எப்படியும் ஒரு முப்பது நாப்பது பீர்பாட்டில் தேத்திடலாம்.. ஒரு பாட்டில் ஒன்னறை ரூபாய் என்றாலும் 45ரூபாய் கிடைக்கும்...

சென்னை ஒரு பெரிய நகரம் தினமும் ஆயிரக்கனக்கில் இறந்து போய்  எரியூட்டப்பட்ட உடல்களின் அஸ்தியை மெரினாவில் கரைக்க வருவார்கள்.. அவர்கள் கரையில் கரைக்க எத்தனிக்கும் போது அதனை வாங்கி கழுத்து ஆழம் உள்ள தண்ணியில் அஸ்தி எலும்பை  கரைத்து விடுகின்றேன் என்று சொல்லி, அந்த அஸ்தி செம்பை வாங்கி கழுத்து ஆழத்து தண்ணியில கரைத்து விட்டு 200 முதல் 300ரூபாய் பணம் வரை வாங்கி விடுவார்கள்..  மெரினாவில் இருக்கும் நொச்சிக்குப்பம், அயோத்தி குப்பம் பசங்கள்...


நான் மேலே சொன்னவைகளை மஞ்சள் பை தூக்கிக்கொண்டு வரும் வெளியூர்க்காரன் யாரும் செய்து விட முடியாது.. பருப்பை எடுத்து கையில் கொடுத்து விடுவார்கள்.. மெல்ல மெல்ல சினேகம் ஆன பின் தான் நீங்கள் மெரினாவில் சுதந்திரமாக நடக்கவே முடியும்..

நான் ஆரம்பத்திலே சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் சாகர் விகார் ஓட்டலில் வேலைக்கு சேர்ந்து விட்டேன் அதனால் எனக்கு எதிரில் இருக்கும் ஐஜி ஆபிசில் இருக்கும் அத்தனை போலிஸ்காரர்களும் என்னோடு பழக்கம் என்பதால்  நான் மெரினாவில் எந்த இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றி திரிந்தேன்..

1994  அம்மாவின் அளவுகடந்த பாசத்தை தட்ட முடியாமல் தோல்வி அடைந்து  எனது ஊர் கடலூருக்கு திரும்பி விட்டேன். மூன்று வருட இடைவேளையில் திரும்ப சென்னைக்கு படையெடுத்து இன்று வரை சென்னையில் சுற்றிக்கொண்டு இருக்கின்றேன்.

சில வருடங்களுக்கு முன் காந்தி சிலைக்கு பின் இருக்கும், நான் வேலை  செய்த ஓட்டலுக்கு போன போது, அந்த ஓட்டலை நடத்தும் சேட்டுவிடம் என்னை அடையாளம் தெரிகின்றதா? என்று கேட்டேன்... நன்றாக தெரிகின்றது என்று சொன்னது மட்டும் இல்லாமல் எனது பெயரையும் எனது ஊரையும் சொன்னார்.. எப்படி சௌக்கார்பேட் இந்த அளவுக்கு தமிழகத்தில் வளர்ந்து இருக்கின்றது என்பது அவர் மூலம் எனக்கு புரிந்து போனது... 

என்னை அந்த ஓட்டலில் வேலைக்கு  சேர்த்து விட்டவரை  அதே மெரினாவில் நான் மனைவியோடு பீச்சுக்கு போன போது,  அவர் ஐஸ்கிரிம்  வண்டியில் ஐஸ் ஐஸ் என்று கூவி விற்றுக்கொண்டு இருந்தார்..

அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை... என்ன  சார் ஐஸ் வேண்டுமா? என்றார்.. நான் என் மனைவியிடம் திரும்பி ஒரு காலத்தில் என் பசி போக்கி, இதே மெரினாவில் தங்க வழி செய்து கொடுத்தவர் என்று அவரை சுட்டிக்காட்டி சொன்னேன்..அவரிடம் நான் யார் என்று சொன்னேன்.. அவருக்கு நியாபகம் வர ஆரம்பித்தது.. அவருக்கு கண்கள் கலங்கியே போய் விட்டது...

ரொம்ப பெருமையா இருக்கும் என்று என் கை பிடித்துக்கொண்டு சொன்னார்...தான் ஒருவனுக்கு வழிகாட்டியாக இருந்தோம் அனால் அவன் இதே மெரினாவை விட்டு வெளியே போய் விட்டான்..ஆனால் நாம் இன்னும் இதே மெரினாவில் இருக்கின்றோம் என்ற குற்ற உணர்வுடனும் தன்னால் வந்தவன் வளர்ந்து விட்ட பெருமைக்காகவும்  அவரின் கண்கள் கலங்கி இருந்தன...
ஆனால் அவர் மட்டும் இல்லையென்றால்  மெரினாவில்  பக்கத்து குப்பத்தில் இருந்த பிரபல ரவுடியின் மச்சான், என்னிடம் கஞ்சா விற்க்கின்றியா? என்று என்னை கேட்டார்...

ஒரு வாரத்துக்கு 15 ரூபாய் சம்பளம்... அதுவே போதுமானது என்று மறுத்து விட்டேன்... அன்று காசுக்கு ஆசைபட்டு தலை ஆட்டி இருந்தால் கடலூர்,வேலூர்,புழல் என்று ஏதாவது ஒரு இடத்தில் இருந்து இருக்கலாம்... மனு போட்டு மட்டுமே என்னை பார்த்து இருக்க முடியும்...





மெரினா பற்றி கடந்த வருடங்களில் நான் எழுதிய பதிவுகள் மேலே இருக்கின்றன ... அதனை கிளிக்கி வாசித்து விட்டு மேலே வாசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 

================   
MARINA-2012/உலகசினிமா/இந்தியா/தமிழ் படத்தின் ஒன்லைன் என்ன?

ஒரு அனாதை சிறுவனுக்கு சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரை எப்படி அடைக்கலம் கொடுக்கின்றது என்பதுதான் ஒன்லைன்..
========================
MARINA-2012/உலகசினிமா/இந்தியா/தமிழ் படத்தின் கதை  என்ன?

பகோடா பாண்டி யாருமற்ற அனாதை சென்னைக்கு வருகின்றான்.. அவன்  சென்னை முழுவதும் வேலை தேடி அலைந்தாலும், அவனுக்கு அடைக்கலம் கொடுப்பது என்னவோ சென்னை மெரினா கடற்கரைதான்.. மெரினாவும் போனதும் வாங்க ராசா என்று அடைக்கலம் கொடுத்து விடும் ரகம் அல்ல...அவன் அங்கு இருக்கும் லோக்கல் பசங்களிடம் அவன் என்னவிதமான பிரச்சனைகளை சந்திக்கின்றான் பிறகு எப்படி சமாளித்து வாழ்கையில் முன்னோக்கி செல்லுகின்றான் என்பதே படத்தின் கதை..
===========================================
படத்தின் சுவாரஸ்யஙகளில் சில...

மெரினா எனது களம்..இயக்குனர் பாண்டிராஜ் மேல் எனக்கு முதல் படம் பசங்க மற்றும் அவரின் இரண்டாவது படம் வம்சம் என இரண்டு படமும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்... அதனால் இந்த படத்தை முதல் நாளே பார்க்க தீர்மானித்தேன்..

மெரினா திரைப்படம் என்று சொல்லுவதை விட தமிழில் மெரினாவைபற்றிய சிறந்த ஆவனப்படம் என்று சொல்லுவேன். அவ்வளவு டிடெய்ல்ஸ் மெரினா திரைபடத்தில் இருக்கின்றது...

நன்றாகவே ஹோம் ஒர்க் செய்து இருக்கின்றார்கள்.. அதே போல நிறைய கட்ஷாட்டுகளில் மெரினாவின்  உண்மையான முகத்தை பதிவு செய்து இருக்கின்றார்கள்.


அங்காடி தெரு போல  வந்து இருக்க வேண்டிய படம்.. அந்த படத்தில் இருந்த ஒரு நெகிழ்சி இந்த படத்தில் இல்லை என்பது ஒரு மைனஸ்தான்...

சென்னை காதலர்களை பற்றி சிவகார்த்திகேயன்,ஓவியா இருவரையும் வைத்து சொல்லி இருக்கின்றார்...
தாழ்வு மனப்பான்மை இருந்து இருந்தாலும், கிராமத்தில் இருந்து வந்து இருந்த காரணத்தாலும்,சென்னை பெண்களை வாரு வாரு என்று வாரி இருக்கின்றார்...கிராமத்திலும் ஓவியா போன்ற பெண்கள் இருக்கின்றார்கள்.. இருப்பினும் மெரினாவில் காதலிக்கும் பலர் திருமணத்தின் போது ஜோடி மாற்றி விடுகின்றார்கள் என்பதுதான் உண்மை... அதை மிக அழகாக நக்கலாக பதிவு செய்து இருக்கின்றார்கள்.. இயக்குனர் பாண்டி.


படத்தில் காதலை பற்றிய டயலாக்குகள் அருமையாக இருந்தது.. முக்கியமாக..... காதல் என்பது காக்கா பீ மாதிரி யார் தலையிலே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விழும்...

பேன்டவனை விட்டு புட்டு பீயை போட்டு வெட்டிக்கிட்டு இருக்கிக்க என்று கூரியர்காரன் சொல்லுவது என்று டயலாக்கில் பின்னி பெடலெடுத்து இருக்கின்றார்கள்..

சிவகார்த்திகேயனுக்கு  பெரிதாக இந்த படத்தில் நடிக்க ஸ்கோப் எல்லாம் இல்லை...இப்படி இந்த மார்க்ல வந்து நில்லுங்க, அப்படியே தலைய திருப்பி சிரிங்க.. உற்ச்சாகமா சிரிங்க என்பதாக இயக்குனர் சொல்லுவதை செய்து இருக்கின்றார்...

ஓவியா கோனவாயை மறைக்க நிறைய டிரை  செய்து டயலாக் பேசுகின்றார்..சில காட்சிகளில் இருக்கு....... ஆனா இல்லை என்பது போல தென்படுகின்றார்..காஸ்ட்யூமர் சைஸ் கண்டினுட்டி மிஸ் ஆவுது பாருங்க...

ஹெச் டி ,டிஜிட்டல் கேமராவில் எடுத்து இருக்கின்றார்கள்..நல்ல முயற்சி.. நன்றாகவும் இருக்கின்றது.. லோ பட்ஜெட் படங்கள் இனி நிறைய இது போல வரும் என்ற நம்பிக்கையை இந்த படம் கொடுக்கின்றது.

இசை கிரிஷ் புதியவர்... எடுத்த இசைக்கருவிகளை கீழே வைக்காமல் வாசித்து தள்ளி இருக்கின்றார்...சில காட்சிகள் அமைதியாக விட்டு இருந்தாலே இன்னும் ரசனையாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து. எந்த பாட்டும் மனதில் நிற்கவில்லை...


காதலர்கள் டிஸ்டர்ப் ஆகின்றார்கள் என்பதை ஒரு காட்சியில் சிவா பூ,டீ,சுண்டல் என்று வரிசையாக வாங்கி அடுக்கி வைத்து விட்டு காதல் செய்வது கிளாஸ்...

முதல் பெயரே பக்கோடா பாண்டி என்று டைட்டிலில் போட்டு தான் திறமைக்கு மதிப்பு கொடுப்பவன் என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றார் இயக்குனர் பாண்டி...

காமராஜர் சாலை போஸ்ட்மேனா அல்லது ராயபுரம் சைடு போஸ்ட் மேனா என்று புரிந்து கொள்ள முடியாமல், வலிந்து திணிக்கப்பட்ட பாத்திரம் போஸ்ட்மேன் பாத்திரம்தான்..

நிறைய வெயிட்டான கேரக்டர்கள் புஸ்வானமாக போவதுதான் இடைவேளைக்கு பிறகு படத்தில் வரும் சின்ன அயற்சிக்கு காரணம் என்பேன்..

பெண்களை பற்றி 420 எஸ்எம் எஸ் ஜோக் செம கலாட்டா...

எனக்கு பிடித்த காட்சி.. பசங்க அத்தனை  பேரும் விமானம் பார்க்க மெரினாவில் இருந்து சைக்கிளில் மீனம்பாக்கம் செல்லும் அந்த காட்சி அனைத்தும் அற்புதம் என்பேன்.

எடிட்டிங் புதியவர்.. பிபிசி இண்டர்வியூ ஷாட்டுகளில் மிளிர்கின்றார்..


ஒளிப்பதிவாளருக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது...

==============
படத்தின் டிரைலர்


===============
படக்குழுவினர் விபரம்...

 Directed by     Pandiraj
Produced by     Pandiraj
Written by     Pandiraj
Starring     Siva Karthikeyan
Oviya
Music by     Girishh G
Cinematography     Vijay
Studio     Pasanga Productions
Release date(s)     February 3, 2012[1]
Country     India
Language     Tamil


தியேட்டர் டிஸ்கி..

சைதை ராஜ் தியேட்டரில் மேட்டனி ஷோ...ஆர்டிஸ்ட் வேல்யூ இல்லாத படத்துக்கு வந்த பெரிய கூட்டம் இயக்குனர் மீதான  எதிர்பார்ப்பை காட்டுகின்றது....

டெக்கோபிஸ்ட் என்ற அண்ணா யூனினவர்சிட்டி பங்க்ஷன் நடக்கபோகின்றது அதுக்கு போட்ட விளம்பரத்துக்கு அண்ணா யுனிவர்சிட்டி பசங்க கைதட்டி தியேட்டரை கலகலக்க வைத்தார்கள்..

ஒவியா ,சிவா வரும் காட்சிகளில்  தியேட்டரில் விசில் சத்தம்..


==============


பைனல்கிக்.
இந்த படம் பார்க்கவேண்டிய திரைப்படம்... இந்த படம் மெரினாவின் சிறந்த ஆவனம் என்று  சொல்லலாம்.. இதில் மெரினாவை பற்றி சொல்லாமல் விடுபட்டு போன கருப்பு பக்கங்கள் நிறையவே இருக்கின்றது..இருப்பினும் வழமையான படங்கள் எடுத்துக்கொண்டு இருக்கும் இயக்குனர்கள் மத்தியல் பேக்டிராப் மாற்றி புது புது களத்தை நோக்கி பயணிக்கும் பாண்டிராஜ் அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புவோம்.. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இந்த படம் பார்த்தே தீரவேண்டிய படம் லிஸ்ட்டில் சேர்ந்து இருக்கும்...இந்த படம் பார்க்கவேண்டிய படம்..
 ========


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

12 comments:

  1. பாண்டியராஜ் கொஞ்சம் சறுக்கிட்டார் போல....
    பார்க்க வேண்டிய படம் ---- பார்த்துட்டா போச்சு...

    ReplyDelete
  2. அப்போ படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

    ReplyDelete
  3. //அங்காடி தெரு போல வந்து இருக்க வேண்டிய படம்.. அந்த படத்தில் இருந்த ஒரு நெகிழ்சி இந்த படத்தில் இல்லை என்பது ஒரு மைனஸ்தான்.//

    அதே.. அதே.. :-)

    - தினேஷ்.

    ReplyDelete
  4. பாண்டிராஜோட ரெண்டு படமுமே என்னைக்கவர்ந்தது
    கண்டிப்பா இந்தப்படமும் பாக்கப்போறேன்

    ReplyDelete
  5. மெரினாவை பற்றிய தங்களின் கண்ணோட்டம் அருமை.
    திரைப்படத்தை இன்னும் அலசியிருக்கலாம்.

    ReplyDelete
  6. //இன்று சொந்த வீட்டில் வெர்டிப்பைடு டைல்ஸ்இல் படுத்து உறங்கினாலும்...

    1994ல்ஆறுமாத காலம் மெரினாவின் பிளாட்பாரத்தில் மேரிபிஸ்கட் அட்டையை விரித்து போட்டு உறங்கியவன் நான்..//

    நம்பிக்கைக்கும் உழைப்புக்கும் நிச்சயம் வெற்றி உண்டு... Hats Off to You Sir...

    ReplyDelete
  7. நிறைய சறுக்கல்கள் இருந்தாலும் முயற்சி எடுத்ததிற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

    தமிழ் சினிமா உலகம்

    மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

    ReplyDelete
  8. வணக்கம் ஜாக்கி அண்ணர்,
    ஆரம்பத்தில் மெரீனா கடற்கரையோர வாழ்வு பற்றிச் சொல்லி, ஓர் யதார்த்த சினிமா/ வாழ்வியலைப் பேசும் சினிமாவினைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறீங்க.
    விமர்சனமும் அழகுற வந்திருக்கிறது.
    உங்கள் கூற்றுப்படியே பாண்டி குறை வைக்கார் என எண்ணத் தோன்றுகின்றது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய பட வரிசையில் இப்போது மெரீனாவும் வந்து விட்டது
    விமர்சனப் பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  9. வணக்கம் ஜாக்கி அண்ணர்,
    ஆரம்பத்தில் மெரீனா கடற்கரையோர வாழ்வு பற்றிச் சொல்லி, ஓர் யதார்த்த சினிமா/ வாழ்வியலைப் பேசும் சினிமாவினைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறீங்க.
    விமர்சனமும் அழகுற வந்திருக்கிறது.
    உங்கள் கூற்றுப்படியே பாண்டி குறை வைக்கார் என எண்ணத் தோன்றுகின்றது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய பட வரிசையில் இப்போது மெரீனாவும் வந்து விட்டது
    விமர்சனப் பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  10. Naalla Comedy Naalla Screenplay. Editing Konjam Short Panni Eerukalam, Chennai Song Super. Pasanga Padam matheri romba Eatheeir Partheen. Tamil Typing Eella Sir Sorry.

    ReplyDelete
  11. Naalla Comedy Naalla Screenplay. Editing Konjam Short Panni Eerukalam, Chennai Song Super. Pasanga Padam matheri romba Eatheeir Partheen. Tamil Typing Eella Sir Sorry.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner