ராமகிருஷ்ணா பள்ளியும் எனது பால்ய கால ஆசிரியர்களும்..



 சமீபத்தில் இந்த விளம்பர படத்தை ரசித்தது போன்று வேறு  எந்த விளம்பரபடத்தையும் நான் ரசித்தது இல்லை..

ஆம் இந்த விளம்பரத்தை பார்க்கும் போது  நெகிழ்ந்து விடுகின்றேன்.. எந்த அளவுக்கு   எனக்கு மூக்கு மேல் கோபம் வருமோ? அதே அளவுக்கு  பயங்கர சென்ட்டி பெலோ நான்......



வகுப்பில்  மழைநாளில் ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டு இருக்கும் போது வகுப்பில் எழுதும் மாணவனின் நோட்டு மேல்   மழைத்துளி விழுந்து நனைக்கின்றது...


 அதே பள்ளியில் படித்து நகரத்தில் பெரிய  வசதி வாய்ப்புகளுடன்  இருக்கும் மாணவனை அந்த வயது முதிர்ந்த ஆசிரியர் பள்ளிக்கு  ஏதாவது உதவி பெறலாம் என்று பார்க்க செல்கின்றார்...  செக்யூரிட்டி உள்ளே அனுமதி மறுக்கின்றான்.. அதை பார்த்த அந்த மாணவன் பதறி வீட்டின் உள்ளே  ஆசிரியரை அழைத்து சென்று  விருந்து கொடுக்கின்றான்...


கடந்த கால நினைவுகளை பேசிக்கொண்டு பழைய  புகைப்பட ஆல்பத்தை பார்க்கின்றார்கள்... தான் படித்த பள்ளியை புகை படத்தில் காட்டி பெருமைகொள்கின்றான் அந்த மாணவன்.... அந்த பள்ளியை சுட்டி காட்டும் போது ஆசிரியர் முகம் மாறுகின்றார்.. அதை மாணவன் கவனிக்கின்றான்... ஆனால் அதை மாணவன் காட்டிக்கொள்ளவில்லை.. ஆசிரியரும் எந்த உதவியும் கேட்காமல் தயக்கமாய் சொந்த ஊருக்கு புறப்படுகின்றார்.. பள்ளிக்கு வந்தால் பழைய பள்ளியின்  கட்டுமாண பணிகளை அந்த  பழைய மாணவன் மேற்பார்வையில் வேலை நடக்கின்றது....


ஆசிரியரை பார்த்த மாணவன் கால் தொட்டு வணங்குகின்றான்...உதவி கேட்காமலே ஆசிரியரின்  பார்வை தடுமாற்றத்தை உணர்ந்து கொண்டு , பள்ளி கட்டுமானபணியை மேற்க்கொண்ட  அந்த பழைய பள்ளி மாணவனை ஆரத்தழுவிக்கொள்கின்றார்.. தன் பள்ளி செப்பனிடப்படுவதை ஆசிரியர் பார்த்துக்கொண்டு இருப்பதோடு அந்த விளம்பரபடம் முடிகின்றது.. கேப்ஷனாக வரும் ஆண் குரல்... நம்பிக்கை அதோனே எல்லாம் என்ற வார்த்தையோடு அந்த விளம்பர படம் நிறைவு பெறுகின்றது... இந்த ஹைக்கு விளம்பரத்தை நான் எத்தனை முறை டிவியில் போட்டாலும் சிறு குழந்தை போல பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.



ஆசிரியர்கள் என்றால் பயம் கலந்த மரியாதை இருக்கும்.. அது எல்லாம் ஒரு காலம்.... நான் 5 ஆண்டு காலம் ஆசிரியர் தொழிலில்  இருந்த காரணத்தினால், அந்த தொழில் மீது  எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும்  உண்டு. எனது மூன்றாவது தங்கை செகன்ட்டிரிகிரேட் டீச்சர்.. அவள் பள்ளியில் இருக்கும் ஒரு மாணவன் அவளிடம் சொன்னானாம்... டீச்சர் நீங்க எங்களை இப்ப எல்லாம் அடிக்க முடியாது.. நீங்க அடிச்ச நாங்க போன் செஞ்சு சொன்னா ,உங்க வேலை காலி என்று நான்காம்வகுப்பு பையன் மிரட்டும் அளவுக்குதான் இன்றைக்கு ஆசிரியர் நிலைமை இருக்கின்றது.....



நான் எட்டாம்வகுப்பு வரை ராமகிருஷ்ணா உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் படித்தேன் அதன்  நிர்வாகி நாகராஜ்..  அவர் ஐயர்....அவரை சின்ன வாத்தியார் என்று அழைப்போம்.. அவருடைய அப்பா   பெரிய வாத்தியார் எங்கள் அப்பாவுக்கு எல்லாம் அசிரியராக இருந்தவர்.. என்னை பள்ளியில்  சேர்க்கும் போது பெரிய வாத்தியார்தான் சரஸ்வதி படத்துக்கு முன் அரிசியில் அ எழுத  கற்றுக்கொடுத்தார்....



 ஐயர்  நிர்வகித்த பள்ளி என்பதால் காலையில் வகுப்புகள் தொடங்கும் முன் ஒரு  சாமிபாடல் பாடியே ஆக வேண்டும்...திருப்பதி மலை வாழும் வெங்கடேசா பாட்டை பாடவேண்டும்.... மதியம் பள்ளி தொடங்கும் போது... ஓம்சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி  ஓம்சக்தி ஓம் பாட்டை தினமும் பாட வேண்டும்...  வெள்ளிக்கிழமை என்றால்  கலை வள்ளித்தாயே கருனை செய்வாயே பாடலை பாட வேண்டும்.  நெற்றியில் கண்டிப்பாக விபதி ,குங்குமம் அவசியம் வைக்க வேண்டும்.. மற்ற மதத்தினருக்கு எந்த கட்டாயமும் இல்லை..


 நான் எட்டாம் வகுப்பு வரை சிங்கர்  சாந்து  பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று இருக்கின்றேன். இல்லை என்றால் தலையில் பெரிய கொட்டு ஒன்று வைப்பார்.. அல்லது பக்கத்து பையனை கொட்ட வைப்பார்...  சின்ன வாத்தியார் வரும் போது நெற்றியில் ஏதாவது இருக்க வேண்டும்.. பொட்டு  மறந்து விட்ட பசங்க.. சட்டென சாக்பிஸ் அல்லது பல்பத்தை தரையில் தேய்த்து  நெற்றியில் விபூதி போல வைத்துக்கொள்வோம்.


 தரையில் தான்  உட்கார்ந்து இருப்போம் ஆசிரியர் வந்தால் எழுந்து நின்று வணக்கம் சொல்ல வேண்டும்... அப்படி  எழுந்து சொல்லும் போது  தரையில் அங்காங்கே பல்பத்தை  தேய்த்தவைகள்  பட்டை கோடுகளாக திட்டு திட்டாக மார்டன்   ஆர்ட் போல காணப்படும்.
மார்கழி மாத்தின் போது  திருப்பாவை திருவம்பாவை இரண்டு டீச்சர்கள் பாட கூடவே பாட  வேண்டும்.. மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் பாட்டை கோரசாக பள்ளியே பாடும் போது தெய்வ கடாட்சமாக இருக்கும்..



இந்த பள்ளியில் பெரிய வினோதம் என்னவென்றால்... பெண் டீச்சர்களை அக்கா என்று அழைக்க வேண்டும்.. ரேவதி அக்கா , சரஸ்வதி அக்கா, ரோஸசரி அக்கா என்று அழைக்க வேண்டும்..  இதில் பெரும் கொடுமை என்னவென்றால் 50 வயது சக்குபாய் டீச்சரை  சக்குபாய் அக்கா என்று அழைத்து மகிழ்ந்த கொடுமையும் நடந்து இருக்கின்றது..


==============
  ரோசரி டீச்சர்

ராமகிருஷ்ணா பள்ளியில்  எனக்கு ஆணா ஆவன்னா சொல்லித்தந்த டீச்சர் பெயர் ரோஸரி .. ஏனோ தெரியவில்லை.... அந்த  டீச்சர் கையில் கட்டி இருக்கும் வாட்சும் அந்த கையும் எனக்கு  ரொம்பவே பிடிக்கும்... படிப்பில் ஆனா ஆவன்னாவை சரியாக சொல்லவில்லை என்றால் ஸ்கேலில் உடம்பில் விளையாடுவார்.. பட் பட் என்று பொட்டு பட்டாசு   வெடிக்கும் சத்தம் கேட்கும்... ஒன்றாம் வகுப்பு ஏ பிரிவு டீச்சர்.
============
சரஸ்வதி டீச்சர்..

 விதவை டீச்சர்... அவர் புருஷன் இறந்த செய்தி கேட்டோ அல்லது  நினைவு வந்தோ பள்ளியில் ஒ ராமா என்று அழுத்தாக நியாபகம்.. ஒன்றாம் வகுப்பு  பி பிரிவு டீச்சர்.. சரஸ்வதி னையோடு சாந்தமாக இருப்பார் இந்த  சரஸ்வதி பிரம்போடு இருப்பார்.. எனக்கு ரோசரி டீச்சரைதான் எனக்கு ரொம்பவே பிடிக்கும்..
====================
பூமா டீச்சர்..

 சுந்தரி கண்ணால் ஒரு சேதி  பாட்டில் ஷோபனாவை பார்க்கும் போது எல்லாம் எனக்கு பூமா டீச்சர்  நினைவுக்கு வருவது தவிர்க்க முடியவில்லை... நல்ல அழகா நெடு நெடுன்னு உயரமா இருப்பாங்க...  மேக்ஸ் எடுத்தாங்க.. கண்டிப்புக்கு பேர் போனவங்க...ஒரு வருஷம்தான்... வேற  ஸ்கூலுக்கு மற்றலாகி  போயிட்டாங்க... கண்ணீர் வழிய விடை கொடுத்தோம்.

===============
  ரேவதி  டீச்சர்..

 குள்ளமா இருப்பாங்க... புடவையை ரொம்ப ஏத்தி கட்டி இருப்பாங்க..வாத்து நடக்கறது போல நடப்பாங்க.. பட் நல்லா பாடம் சொல்லி தருவாங்க... தமிழ், வரலாறு நல்லா சொல்லி தருவாங்க...
=========
 விசாலாட்சி டீச்சர்..

பின்தங்க்கிய வகுப்புல இருந்து வந்தவங்க.. ஒருவாட்டி  ராமு வாத்தியருக்கும் இவங்களுக்கும் நடந்த சண்டையில் என் ஜாதி பேரை சொல்லிட்டார்ன்னு ஒரு குண்டை தூக்கி போட்டு, அவரை வெல வெலக்க வச்சி அழுவாத குறையா  சந்தியம்  பண்ண வச்சவங்க...  வீட்டுல இருந்து பசங்ககிட்ட ஆப்பிள் எடுத்துக்கிட்டு வரச்சொல்லி, பசங்க எதிர்க்க   ஏவாள் போல கடிச்சி  சாப்பிடுவாங்க.. திடிர்ன்னு சொம்பு எடுத்துகிட்டு போய் டீ வாங்கிட்டு வரச்சொல்லி குடிப்பாங்க...  நோட்டுல நடு பக்கத்தை  எல்லா பசங்ககிட்டயும் பிச்சி கொடுக்க சொல்லி , அவுங்க பசங்களுக்கு ரப் நோட்டு தச்சி கொடுப்பாங்க..... இவுங்க அளவுக்கு பசங்களை வேலை வாங்கின டீச்சர்  வேற யாருமே இல்லை. ஒருவாட்டி என்னை டீ வாங்கிட்டு வர  சொன்னாங்க... ப்ச்சே இதுக்கு  அப்புறம் வேண்டாம்..
================
சாந்தா டீச்சர்...

சாந்தா டீச்சர் ஓவல் ஷேப் முகம்..முகத்துல அம்மை வார்த்த  தழும்பு பவுர்ணமி நிலவுல  லைட்டா தெரியற கரை  போல தெரியும்.. ரெண்டு அண்ணம் கிஸ் அடிச்சகறது போல இருக்கற டாலர் செயின் 1980 களில் ரொம்ப பேமஸ்.... அதை  அப்ப அப்ப எடுத்து பல்லால கடிச்சிகிட்டு பாடம் நடத்துவாங்க...
===================
ஜுலியட் டீச்சர்..

அவுங்க புருஷன் பேரு  ரோமியோ.. கருப்பா இருந்தாலும் களையான முகம்.. கொஞ்சம் தடித்த உருவம்..ஐடெக்ஸ் கம்பனி ஓனர்  மக போல   மைய கண்ணுல அப்பிகிட்டு வருவாங்க... ரொம்ப  பிடிச்ச பசங்களை தொங்க பையான்னு சொல்லி கொஞ்சுவாங்க....
=========
பரசுராம் வாத்தியார்..


பள்ளியோட டெரர் வாத்தியார்... செக்க மாத்து கொடுப்பார் முதுகு  தோல் பிஞ்சிடும்... கண்டிப்பு இருக்கும் அதே அளவுக்கு அன்பும் இருக்கும் அவர் பேரை கேட்டாலே பய  புள்ளைங்க ஒன்னுக்கு போய்டும்.. ஆசிரியர் தொழிலுக்காக கடைசி வரை கன்னிகழியாமலே பேச்சிலர் வாழ்க்கை வாழ்ந்தவர்.. இப்ப இருக்கற  லேடி பேர்ட் சைக்கிள் போல  சின்ன சைக்கிள்  வச்சி இருப்பார்.. அந்த நாள் முதல் இந்த நாள் வரை பாட்டுல சிவாஜி சைக்கிளை ஓட்டிகிட்டு போவது போல  சைக்கிளை ஓட்டிகிட்டு போவார்.. கப்பல் விழுந்தாலும்  கன்னத்தில் கை வைக்காதே என்று அடிக்கடி சொல்லி பசங்களையும் பக்கத்து  கிளாஸ் டீச்சரையும் வம்பு செய்யுவார்.
 பேச்சிலார் என்பதால் அழுக்கு வேட்டியிலதான் அதிகம் இருப்பார்...பல்லில் மஞ்சள் கரை ஏறி இருக்கும்...
============================
ராமு வாத்தியார்...


 நெட்ட  கொக்கு போல நெடு நெடு உயரம்... பேன்ட் சட்டையிலதான் இவரை பார்க்க முடியும்...பசங்களை அதிகமா அடிக்கமாட்டார்.. நல்ல வாத்தியார்.
==============
ஜெயபால் வாத்தியார்..


வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை ..  முழுக்கை சட்டையை ரவுடி போல  முட்டி வரை  நருவிசா மடிச்சி விட்டு இருப்பார்.. எல்லா பொம்பளை டீச்சரையும்  விளையாட்டுக்கு வம்புக்கு இழுத்துகிட்டு இருப்பார்... தமிழ் செய்யுள் ஒன்னு நடத்தினார் ... நாலாப்பு படிக்கும் போது, அவர் சொன்னது இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கு.. நான் செத்து  பாடையில என்னை தூக்கிகிட்டு போகும் போது கூட மறக்கம என்  சாவுக்கு வரும் போது பாடனும் என்ற்றார்...
 என்ன பாட்டு எதுல இருக்குது என்ன அர்த்தம் எனக்கு  எதுவும் தெரியாது..

வருந்தி அழைத்தாலும் வராத வரா
பொருந்துவன போமினி என்றால் போகா...
இருந்தோங்கி  நெஞ்சம் புண்ணாகி
நெடுந்தூரம் தாமினைந்து,
துஞ்சுவதே மாந்தர் தொழில்...
( என்று எல்லோரும் கத்தி கத்தி மனபாடம்  செய்த செயுள்... அந்த செயுளை சரியாக  என் ஞாபகத்தில் இல்லாமல் கொலை செய்து இருக்கின்றேன் என்றுமட்டும் எனக்கு தெரிகின்றது.. தமிழ்  பற்றுள்ளோர்.. தமிழ் அறிஞர்கள் என்னை மன்னிக்க..)
இன்னும் அந்த மனுசன் அப்படியேதான் இருக்கார்..  எப்படி அந்த இளமை சாத்தியம்ன்னு தெரியலை....??
===========================
லட்சுமி டீச்சர்...


 பெரிய பொட்டு வச்சிகிட்டு மக்களகரமா வருவாங்க.. மார்கழி மாசத்துல மார்கழி திங்கள் சூப்பரா பாடுவாங்க... ஏழாவதுக்கு பாடம் எடுத்தாங்க..
==========
சாந்தாபாய் டீச்சர்...


தன் பெரிய உடம்மை  தூக்க முடியாம தூக்கிகிட்டு நடந்து வருவாங்க 50 வயசை அப்பயே கடந்தவங்க.... கண்ணாடி போட்டு இருப்பாங்க... இவுங்களையும் நாங்க அக்கான்னுதான் கூப்பிடுவோம்..
=============
செல்லம்மா டீச்சர்.....


 அந்த கால பாக்கியராஜ் படத்து டீச்சர் போல கருப்புக்கண்ணாடி அணிஞ்சி இருப்பாங்க..பிரம்பு விளையாடும்...
===============
கனகவல்லி டீச்சர்...


மைகுறத்தியே மிஞ்சற அளவுக்கு மை வச்சிகிட்டு வருவாங்க.. தண்ணி பாட்டிலை எடுத்து  அடிக்கடி குடிச்சி தள்ளுவாங்க... ஆண்மை கலந்து அதட்டலோடு பேசுவாங்க...
================
 எட்டாவது படிக்கும் வரை அதுதான் பள்ளி....   பெண் ஆசிரியர்கள்.. நிறைய பேர் மாறி விட்டார்கள்.. ஆனால் ஆண் ஆசிரியர்கள்.. மாறவே மாறாத பள்ளி என்றால்  அது ராமகிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப்பள்ளிதான்...


ஒரு வாத்தியார் மூஞ்சை எட்டு மணி நேரம் பார்த்துகிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கனும்.. டீச்சருங்க பிரியட் பிரியட்டுக்கு  மாறுவாங்க அப்படின்னறதே எனக்கு செயின்ட் ஜோசப்  ஸ்கூலுக்கு போனப்புறம்தான் தெரியும்..



ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை  கூறைக்கொட்டகையில் இருந்து  ஓட்டு போடு கட்டிய கட்டிடத்துக்கு என் உழைப்பு அந்த பள்ளியில் இடம் பெற்றது..  அறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை  மூன்று ஆண்டுகள்.. மண் சுமந்து இருக்கின்றோம்..



 கல்லூரியில்  வேலை பார்க்கும் போது  எனது பேருந்தில் பயணம்  செய்த  மைக்ரோ பயாலாஜி படித்த மாணவி பெயர் ஜெஸ்மிதா...  பூர்வீகம் கல்கத்தா, சென்னை சென்ட்தாமஸ் மவுன்ட்டில் உறவினர் விட்டில் தங்கி படித்தாள்...பேருந்தில் என்னை சுற்றி உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு வரும் பெண்களில் அவளும் ஒருவள்..  


மூன்று வருட பழக்கம்.. கடைசி வரை தமிழ் அவளுக்கு வரவே  இல்லை...ஆங்கிலத்தில்தான் என்னுடன் பேசுவாள்..சானும் ஆங்கிலத்தில் பேசுவேன்... ஒரு முறை கல்கத்தாவில் இருந்து அவள் அப்பா அம்மா சகோதரன்கள் வந்து இருந்தார்கள்...


 என்னை பார்த்து விட்டு அவள் பெற்றோருக்கு என்னை பெருமையாக அறிமுகம் செய்து வைத்தாள்...உடன் அவன் பெற்றோர் அவள் சகோதர்ர்களுக்கு கண்ணை காட்ட அந்த கல்கத்தா  இளைஞர்கள் என் கால் தொட்டு வணங்கி முகமன் கூறினார்கள். உடம்பு சிலிர்த்து போன நாள் எதுவென்றால் அந்த நாளை சொல்லுவேன்.- இன்றும் என்னுடம் கல்கத்தாவில் இருந்து தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கின்றாள்.. ஆசிரியர்  தொழிலை உயர்வாய் நினைக்க வைத்த நாள் அந்த நாளே...


(6/03/2008 அன்று எங்கள் கல்லூரி பேருந்து தினத்தின் போது எனது சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுடன்... புகைபடத்தில் இடது புறத்தில் இருந்து கைகட்டிக்கொண்டு இருக்கும் இரண்டாவது மாணவி... இன்னும் நிறைய பற்றி எழுதலாம் நேரம் வரும் வரை எழுதுவேன்..)

எட்டுவருடங்கள் எனக்கு  கல்வி கண் திறந்த ஆசிரியர்  பெருமக்களுக்கும் என் பள்ளிக்கு என் நன்றிகள்.. ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர்  தின  நல்வாழ்த்துகள்.
  பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

12 comments:

  1. பூவிதழ்கள் கோர்ப்பது போல பள்ளி நினைவுகளை அழகான மாலையாக கோர்த்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Nice jackie...You can't see the Kalyan ad without tears...an unforgettable

    ReplyDelete
  3. //வருந்தி அழைத்தாலும் வராத வரா
    பொருந்துவன போமினி என்றால் போகா...//
    அந்த ஆசிரியர் இந்த வாசகத்தை உணர்ந்து வாழ்கிறார் போலும் அதுவே அவர் மாற்றமின்மைக்குக் காரணமென நினைக்கிறேன்.
    அழகிய நினைவுத் தொகுப்பு.

    ReplyDelete
  4. பள்ளி நினைவுகளையும், ஆசிரியர்களையும் பற்றி அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. Jacki anne antha tea sompa enna senjinga?

    ReplyDelete
  6. "இந்த ஹைக்கு விளம்பரத்தை நான் எத்தனை முறை டிவியில் போட்டாலும் சிறு குழந்தை போல பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்"

    me too. it is very touching. குசேலன் க்ருஷ்ணணிடம் ஏதும் கேட்காமலே வந்த மாதிரி.

    ReplyDelete
  7. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே...
    அருமையாய் அழகாய்....இரசித்தேன்.

    நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது,
    வரலாறு பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர்.
    நானும் பக்கத்தில் இருந்த பையனும் மும்முரமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தோம் ஆசிரியர் கவனித்து விட்டார் நானும் அதை கவனித்து விட்டேன் உடனே என் நுண்ணறிவுக்குள் ஏதோ பளிச்சிட என்ன பாடம் நடத்துகிறார், எந்த பகுத்க்குள் பாடம் சென்று கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டேன், பக்கத்தில் பேசிக் கொண்டிருண்டவன் அதை பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டிருந்தான், நினத்த மாதிரியே ஆசிரியர் அவனை எழுப்பி கேள்வி கேட்க, அவனோ என்னைப் பார்க்க, நானோ, காண்டாமிருகம் என்று சொல்லி வைக்க அதையே அவனும் சொல்ல (ஆசிரியர் கேட்ட கேள்வி சிவாஜியின் தந்தையின் பெயர் என்ன) ஒரு நிமிடம் திகைத்த ஆசிரியர் உடனே கொல்லென்று சிரிக்க அதைத் தொடர்ந்த அத்தனை மானவர்களும் சிரிக்க (என்னையும் சேர்த்துதான்)அவனோ என்னை முறைக்க....
    அந்த நாள் பள்ளி ஞாபகம் மறக்க முடியாது நன்றி ஜாக்கி.

    ReplyDelete
  8. Good Post ....
    I have also got the same feeling when i watch the advertisement in TV . . .

    ReplyDelete
  9. Good Post ....
    I have also got the same feeling when i watch the advertisement in TV . . .

    ReplyDelete
  10. மலரும் நினைவுகள்!ஏற்ற நேரத்தில் ஏற்றதொரு பதிவு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. நீங்க சொல்றது சரி சார்,நானும் திருச்சி E.R.SCHOOLல்லேதான் படிச்சேன் R.S.K வாத்தியார் வீட்டு பாடம் எழுதவில்லையென்றால் கையில் ஸ்கேலால் அடிப்பார்,கை வீங்கி அழுது கொண்டே வீட்டுக்கு போனால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இரண்டு அடி கூடுதலாக கிடைக்கும்,ஆனால் ஆசிரியரை குறை சொல்ல மாட்டார்கள்.அந்த காலம் பொற்காலம்தான்,. பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner