இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரகுமான் ஜி.


2009  ஆம் ஆண்டு ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவை திரும்பி  பார்க்க வைத்த ஆண்டு..

கோல்டன் குளோப்பில் பப்டா என்பதோடு விட்டு விடாமல் ஒரேநாளில்  ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார் பெற்ற  இசையமைப்பாளனை மேற்கத்திய  உலகமும் கிழக்கிந்திய உலகமும்  ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தன.... அவ்வளவு ஏன்... ஸ்பீல் பெர்க் படங்களுக்கு இன்றுவரை  இசைக்கோர்ப்பு செய்யும் ஜான்வில்லியம்ஸ் போன்ற  இசைமேதைகளே கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்...

 ஆம் இந்தியா சார்பாக ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை ஏ ஆர் ரகுமான் பெற்றார்...


இதே நாளில் 1966 ஆம் ஆண்டு ஒரு ஆண் மகன் பிறந்தான்... அவன் தனது 43 வயதில்  அவன் பிறந்த மண்ணை ஆச்சர்யத்தோடு திரும்பி பார்க்க வைப்பான் என்று அவன் நெற்றியில் இறைவன் எழுதி  இருக்க வேண்டும்... இல்லையென்றால்  ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார் ஒரே மேடையில்  எப்படி  சாத்தியம்??

 இந்த பதிவு ரகுமானின் சரிதை சொல்லும் பதிவு அல்ல.. ஒரு சாமான்யமனிதனான என்னிடம் ரகுமான் பச்சக் என்று ஒட்டிக்கொள்ள என்ன காரணம்..??

விக்ரம் படத்தில் எல்லோரும் வனிதாமணி வனமோகினிக்கு  வந்தாடு என்று மெய்மறந்தால்... எனக்கு..... விக்ரம்..... நான் வெற்றிபெற்றவன்... பாடல் எனக்கு ரொம்ப  பிடிக்கும்... 

அதே போல தூங்காத விழிகள்  ரெண்டு அல்லது வாவா அன்பே  அன்பே  பாடல் எல்லோருக்கும்  பிடிக்கும் என்றால் எனக்கு .... ராஜா... ராஜாதிராஜன் இந்த ராஜாதான் எனக்கு மிகவும்  பிடிக்கும்,.. 

அவ்வளவு ஏன்... அஞ்சலி அஞ்சலி  எங்கள் கண்மணி கண்மணி என்று சோகமாக எல்லோரும்  பாடினால்.. எனக்கு சம்திங்... வீ வான்ட் சம்திங பாடல்தான்  எனக்கு பிடிக்கும் ... ஏன்னா  என்னோட டிசைன் அப்படி....

ஆனால் முதல் முறையாக ஒரு மெலடி பாடலில் நான்  மனம் மயங்கினேன்...
நான் கடலுர்காரன்.. சென்னையில் ஏற்படுத்தும் எந்த நாகரீக மாற்றமும் பாண்டிச்சேரியில் உடனே பாய் போட்டு  படுக்கும்... நாங்கள் கடலூர் என்பதால் பாண்டி நாகரீகம் எங்களையும் தொட்டுக்கொள்ளும்.. அதே போல படத்தை ரசிக்க பாண்டி ரசிகர்களுக்கும்கடலுர் ரசிகர்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கும் அதனாலே  பாண்டி சென்று படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டு இருந்தோம்..


1991 ஆம் ஆண்டு கடலுர் முத்தாலம்மன்  கோவில்  திருவிழாவிலும்  கூத்தப்பாக்கம் முருகன் கோவில் திருவிழாவிலும் அந்த பாடல் பாடப்பட்டது.... பொதுவாக தபேலா ஆதிக்கம் அதிகம் இருக்கும் பாடலில்... தபேலா ஒலியே இல்லாமல் ஒரு பாடல் வித்தியாசமான  ஓசைகளுடன் மனதை மயக்கியது... அந்த பாடல்தான் ரோஜா படத்தில் வந்த சின்ன சின்ன ஆசை.,...

பாண்டிச்சேரியில் இருந்து வந்த விக்டோடியூனர்ஸ் அந்த பாடலை பாடினார்கள்.. என்ன படம் என்று விசாரித்த போது ரோஜா என்று சொன்னார்கள்... அத்தோடு நான்  மறந்துவிட்டேன்..

1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி  ரோஜா ரிலிஸ்.. பாண்டி ராஜா தியேட்டருக்கு உள்ளே சென்றால் படம் போட்டார்கள்.... இசை ரகுமான் என்று பெயர் வந்தது...கைதட்டல் காதை கிழித்தது....சின்ன சின்ன ஆசை  பாடல் வந்த போது கரகோஷம்  விண்ணை அதிர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.. அதை விட ருக்குமணி ருக்குமணி பாடல் வந்த போது  தியேட்டர் ஸ்கீரின் எதிரே போய் ரஜினி படத்துக்கு  ஆடுவது போல  ஆடி கத்தி தீர்த்து விட்டார்கள்... வழக்கமான பாணியில் இல்லாத ஒலிக்கலவையில் அந்த திரைப்படத்தின் இசை இருந்தது..


 அல்லா ரக்கா ரகுமான் என்ற அந்த  இசை மேதை  அவரின் முதல் படமான  ரோஜா மூலம் வலுவாக கால் ஊண்றியதோடு தேசிய விருதையும் பெற்றார்.

அதன் பின் புதிய முகம் வந்த போது முதல் படம் போலவே இருக்கின்றது... எங்கே தேரப்போகின்றது சீக்கிரம் காணாமல் போய் விடும் என்று  எல்லோரும் கங்கனம் கட்டிக்கொண்டு காத்திருந்தார்கள்... அடுத்து வந்த ஜென்டில்மேன் படம் மூலம் தான் தோற்க்க வந்தவன் அல்ல என்பதை நிருபித்தார்....

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு பாடலை இப்போது வேண்டுமானால் யார் வேண்டுமானாலும்  பாடி விடலாம் .. ஆனால் அன்று அந்த பாடலை பாட அவ்வளவு கஷ்டப்பட்டோம் என்றால் மிகையில்லை.

கிராமத்து படத்துக்கு ரகுமான் செட்ஆகமாட்டார் என்று அவரின் முதல் கிராமத்து  படமான கிழக்குசீமையிலே திரைப்படத்துக்கு  விகடன் எழுத ஆனால் எல்லா தளங்களிலும் இயங்கும் ஆலரவுண்டர் நான் என்று தன் திறமையின் மூலமும் அடக்கத்தின் மூலமும் நிரூபித்தார்.

அது மட்டுமல்ல.. மதராசி என்று ஏளனம் செய்த இந்திக்காரர்களை...1995 ஆம் ஆண்டு வெளியான ரங்கீலா திரைப்படம் மூலம் திரும்பி பார்க்கவைத்தார் .ரகுமானின் குரல்வளம் அவருக்கு  பெரியபலம். அவர் இந்திக்கத்துக்கொண்டு அவர் பேசும் ஆங்கிலமும் இந்தியும் பெரிய காண்வென்டில் படித்த பிள்ளை போல பேசுவார்... படித்தது பத்மாஷேஷத்ரி என்றாலும் பதினோரு வயதில் அப்பா மரித்து போன காரணத்தால் ஸ்கூல் டிராப் அவுட்...  ஆனாலும் மூன்று மொழிகளில் அவர் ஆதிக்கம் சான்சே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்....ஆனாலும்‘இன்று இந்தியா மற்றும் உலக அரங்கில் ரகுமான்  தவிர்க்க முடியாதஇசையமைப்பாள என்றே சொல்ல வேண்டும்..


குரு படத்தில் ரகுமான் பாடிய தம்தரே தம்தரோ பாடலில் சாசா நீசா ன்னு ஒரு ஜதி பாடுவார்...அதே போல  நீயும் பாடினா...ஆயிரம் ரூபாய் தரேன்னு எங்க  வீட்டம்மா பந்தயம் வச்சாங்க.. இன்னைக்கு வரைக்கு அந்த சவால்  ஸ்டில் ஆன்ல இருக்கு என்ன செய்ய... அந்த ஆளு பாடிட்டு எனக்கு ஆப்பு வச்சிட்டு  போயிட்டார்... எந்த ஆர்கெஸ்ட்ராவிலேயும் அந்த பாட்டை பாட ரொம்ப யோசிப்பாங்க என்பதே நிஜம்.



1997 ஆம் ஆண்டு இந்தியாவின் 50 வது பொன்விழா  ஆண்டு ..டிடியில லைவ் எதேச்சையா நைட்டு பதினோர மணிக்கு டிவி  பார்த்தா ரகுமான் பாடறார்.. வித்தியாசமான ஹேர் ஸ்டைல்.. வந்தே மாதரம் பாடறார்... புல்லரிச்சி போச்சி...  உடம்புல இருக்கற மயிர் எல்லாம் சிலிர்த்துடுச்சி....தமிழ்ல பாடறார்  அதவும் மீயூசிக் விடியோவுல வெறித்தனமா பாடுறார்.. சான்சே இல்லை.. இந்தியாவின் அனைத்து இளைஞர்களின் மனதிலும் ஹீ இஸ் மை மேன்... ஹீ இஸ் அவர் மேன்னு நினைக்க தோனிய நாள்  அது... அதுக்கு அப்புறம் இன்னைக்கு வரைக்கு ரகுமானை அசைச்சிக்க முடியலை..

23 வயசுல திரைத்துறையில்  நுழைந்து அவருடைய சவால்களை அவரே உடைச்சிக்கிட்டு போய்க்கிட்டு இருக்கார்...


ரகுமானை எனக்கு ரொம்பவும் பிடிக்க முக்கியகாரணம் ஒரு குடும்பத்தில்  பெரிய புள்ளைய இருந்து முன்னேறி வருவது எவ்வளவு சிரமமான விஷயம்ன்னு எனக்கு தெரியும்...அதே போல ரொம்ப ஜாக்கிரதையா காய் நகர்த்தனும்...ஒவ்வோரு படியும் கவனத்துடன் எடுத்து வைக்கனும்  அப்படி படிப்படியா முன்னேறி சாதிக்கறது சாதாரணமாண விஷயம் இல்லை...

 அது மட்டுமல்ல குடும்பத்தை  காப்பாற்ற.. சப்போஸ் கீ போர்டு வாசிக்கும் வேலைஇல்லைன்னா கார் டிரைவரா போக சேப்டிக்கு கார்டிரைவிங்கும் கத்து வச்சிக்கிட்ட அந்த டெடிக்கேஷன்... ரகுமான்ஜி சான்சே இல்லை...

ஒரு காலத்தில் எஸ்பி,ஜானகி,மலேஷியா வாசுதேவன்,சுசிலா, சித்ரா, ஜென்சின்னு ஒர  ஐந்து ஆறு பேர்தான் பின்னனி பாடகர்களா இருந்தாங்க.... ஆனா இன்னைக்கு எத்தனை பாடகர்கள் வந்து இருக்காங்க..?? எத்தனை பேர் குடும்பம் இசையால் பொழைக்குது..  அதுக்கு காரணம் ரகுமான்தான்...

அதுமட்டுமல்ல.. முதன் முதலாக தன்னோடு இசையமைப்பில் உறுதுனையாக இருந்த கலைஞர்களின் பெயரை கேசட்டில் பெயர் போட்ட முதல்  இசையமைப்பாளர் ரகுமான்தான்.. வந்தே மாதரம் சிடி கவர்ல எக்கியூப்மென்ட் கொடுத்த சரவணா வீடியோஸ் ஓனர் பெரியவர் கணேசன் பெயர் கூட போட்டு இருப்பார்.... அந்த குணம்தான்.. ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் வாங்க காரணமாக இருந்து இருக்கின்றது..

ஒரு நாள் அவரை அவரோட ஸ்டுடியோவுல தினகரன் அவார்டு கொடுக்கும் போது ஊர்ல இல்லை என்பதால்  அவர் வீட்டுக்கு போய் கொடுத்து அதை வீடியோவாக பதிவு செய்தோம்.. அப்ப யூமாட்டிக் டெக்... நான் கேமரா  அசிஸ்டேன்ட்..  இப்ப போல அப்ப போட்டோ சாத்தியம் இல்லை.. ஒரு ஆட்டோகிராப் வாங்கறதுக்குள்ள... ஆள்  காணாம போயிட்டார் அந்த ஏக்கம் எனக்கு இன்னமும் இருக்கு..



இன்று பிறந்தநாள் காணும் மெட்ராஸ் மேஸ்ட்ரோ ரகுமான் இன்னும் பல சாதனைகள் புரியவும் உடல் நலத்தோடு ஆரோக்கியமாக இருக்கவும்., எல்லாம்வல்லபரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரகுமான்ஜி.,
எல்லா புகழும் இறைவனுக்கே...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

06/01/2015


எழுத்தில் எழுத முடியாத நிறைய விஷயங்களை இந்த வீடியோவில் பேசி இருக்கின்றேன்... 







நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

4 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ARரகுமான்

    ReplyDelete
  2. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு...

    ReplyDelete
  3. http://marubadiyumpookkum.wordpress.com/2014/12/13/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/ its not relevent with A.R.R. post. but anyhow I want to convey to u so..

    ReplyDelete
  4. உங்களது கட்டுரை மிக்க நன்று......

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner