இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அத்தை




உங்களுக்கு எல்லாம் வீடு வாசல்லாம் இல்லை..??? நாளும் கிழமையான காலையில எழுந்து பல்லை கூட விளக்காம வந்துடுங்க… சனியன்க… என்று ராமு அத்தை என்னை திட்டுவார்.. காரணம் வீட்டை கழுவிக்கொண்டு இருப்பார்.
அதில் காலை துடைக்காமல் நடந்து போனால் யார்தான் திட்டமாட்டார்கள். நான் வழக்கம் போல இந்த காதில் வாங்கி அந்த காது வழியாக விட்டு விடுவேன்.
இத்தனைக்கும் அப்பாவின் உடன் பிறந்ததங்கை எல்லாம் இல்லை…கிராமங்களில் மாமா மச்சான் அண்ணன் தம்பி என்று பழகுவார்கள் இல்லையா அது போலத்தான்… ரொம்ப வருடம் கழித்து ஒரு ஏதோ ஒரு உறவின் மூலம் நடந்த திருமணம் மூலம் அத்தை வீடு சொந்தக்காரர்கள் ஆகி விட்டார்கள் என்று அப்பா சொன்னார்… அது என்னவோ கொஞ்சம் அன்னியப்படுத்தியது போல இருந்தது..


என்னை பொருத்தவரை அது என் அத்தை வீடு… யாருக்கு கல்யாணம் ஆனா என்ன ? ஆகா வீட்டால் என்ன??
வீடு என்னவோ எனக்கு 17 பாராதியார் நகர்… ஆனால் என்னை வளர்ந்து எடுத்தது என்னவோ 12 கூத்தப்பாக்கம் மெயின் ரோடு ராமு அத்தைதான் தான்.
ராமு அத்தை எப்படி ஒரு சிலருக்கு காட் பாதர் இருப்பார்ங்களோ.. அவுங்க எங்களை பொருத்தவரை காட் உமன் போல.. அவர்கள் சொல்வதே கடைசியில் எடுத்துக்கொள்ளப்படும்…. சின்ன வயசுல செம்ம பயம் அவுங்கள பார்த்தா.. செம்மையா திட்டுவாங்க. இப்பவும் அவுங்க காட் உமன்தான்… அவுங்க மேல இப்ப பயம் எல்லாம் இல்லை நிறைய மரியாதை உண்டு.
ஆனா எனக்கு மீசை முளைக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க அந்த திட்டுகள் குறைய ஆரம்பிச்சது…. எல்லாத்தை விட நான் எந்த தப்பு தண்டாவிலும் இறங்காம போனதுக்கு காரணம் அவுங்க பேர் கெட்டு போய்டும்ன்னுதான்.. எல்லாத்தயும் விட ஊர்ல நாம நடந்தா நாலு பேர் நம்மை மதிக்கனும் என்று சொல்லி சொல்லி வளர்த்தவர். ராமு அத்தை…
ஒரு கட்டத்துல அத்தை வீட்டுல மாமா கலர் டிவி வாங்க.. சாப்பாடு விளையாட்டு எல்லாம் போய் இப்ப டிவி பார்த்துட்டு நைட்டு அங்கேயே படுத்து டேரா போட ஆரம்பிச்சேன்….
அத்தை வீட்டுல எத்தனை மணிக்கு படுத்தாலும் ஆறு மணிக்கு எழுப்பிவிட்டுவாங்க… காலையில டீ.. பெட்டுக்கே வந்துடும். எதிராளிக்கு மரியாதை கொடுக்கறதுல இருந்து டிரஸ் கலர் செலக்ஷன் வரை அவுங்க கிட்ட கத்துக்கிட்டதுதான்.. ராமு அத்தை வீடு எப்பயும் சாப்பாடு இருக்கும் வீடு… ஊராக்காளி மாடு போல எங்க ஊர் சுத்தி வீட்டுக்கு வந்தாலும் ராமு அத்தை சோறு போட்டுவிடுவார்…
எப்படி அவுங்க புள்ளைங்க மூனு பேரை வளர்த்தாங்களோ.. அப்படித்தான் என்னையும் பார்த்தாங்க. அம்மா ரொம்ப நேர்மையானவ நிறைய அட்வைஸ் பண்ணி இருக்கா.. ஆனா அத்தை வீட்டுல அட்வைஸ் மாதிரி இல்லாம எல்லாம் உணர்த்தப்படும்…
உதாரணத்துக்கு வீடு சுத்த பத்தமா இருக்கறது.. எங்க அத்தை விட்டு சமையல் கட்டுல ஒரே ஒரு கரப்பான் பூச்சி இருக்காது.. நைட்டு எத்தனை மணியா இருந்தாலும் துடைச்சி சுத்த பத்தமாக்கிட்டுதான் மறுவேளை..டாய்லட் எப்படி சுத்தபத்தமா வச்சிக்கனும் அப்படின்றதை கத்துக்கொடுத்ததும் அந்த வீடுதான்.
இலையில அவுங்க பராபட்சம் காட்டி பார்த்ததே இல்லை.. அதுவும் அவுங்க சாப்பாடு போடுறது போல வேற யாரும் எனக்கு சோறு போட்டது இல்லை..
பக்கத்துல உட்கார்ந்து இலையில குறைய குறைய இலை நிரம்பிக்கிட்டே இருக்கும்.. என்ன பேசினாலும் இலையில கவனம் வச்சிக்கிட்டே இருப்பாங்க… ஊருக்கு போனா மீன் குழம்பும் கருவாட்டுக்குழம்பும் அசத்துவாங்க..
ரெம்மி சீட்டுகட்டும் பாயிண்டும் விளையாடுவோம் பொழுது போறதே தெரியாது…
பத்திரிக்கை எல்லாம் வாசிச்சி பிங்கர் டிப்ல எல்லாம் மேட்டரோட அப்டுடேட்டுல இருப்பாங்க.... சரி தவறுன்னு நிறைய வாதாடுவோம்.. நிறைய சண்டைகள் தர்க்க நியாங்கள் எல்லாம் நடந்து இருக்கு


அத்தை டுவின்ஸ்… ரெண்டு பேரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்க.. பெரியவங்க ராமு அத்தை சின்னவங்க லட்சுமி அத்தை.. சின்ன அத்தை ரொம்ப கலகலப்பானவங்க… அதிரடி ஆட்டக்காரர்.. யாரையும் வச்சி பார்க்கமாட்டாங்க… மனசுல இருக்கறதை கொட்டிட்டுதான் மறுவேளை. அதே போல சின்ன அத்தையும் வீட்டுக்கு போனா சாப்பிடாம அனுப்ப மாட்டாங்க… ஆனா பேச ஆரம்பிச்சி உட்கார்ந்தா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்க வச்சிடுவாங்க… இரண்டு பேர்ல நான் நிறைய டிராவல் ஆனது பெரியவங்க ராமு அத்தையோடுதான்..
ராமு அத்தைக்கு சிவாஜியும் கலைஞைரையும் ரொம்ப பிடிக்கும் தெரியாத்தனமா கலைஞரை பத்தி தப்பா பேசி மாட்டிக்காதிங்க.. அவ்வளவுதான் உங்க உயிர் உங்க கிட்ட இருக்காது.. அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்… உதாரணத்துக்கு ஜெ சிஎம்மா இருக்கும் போது கூட தனது பேத்திக்கு தமிழக முதலமைச்சர் கலைஞர்ன்னு சொல்லிக்கொடுத்து வளர்த்தவங்க அவுங்க.. கலைஞர் மீதான அபிமானத்துக்கு காரணம் அந்த கல கல பேச்சும் அவரின் தமிழும்தான்.
நான் எல்லாம் சின்ன வயசுல எம்ஜிஆர், ரஜினி ரசிகன்… கமலை ரசிக்க வச்சது அம்மா.. கலைஞரை ரசிக்க வச்சது என் ராமு அத்தையும் அத்தை பசங்களும்தான்,.
ஏம்பா காரை பார்த்தேன்…. யப்பா பொழச்சது பெரிய விஷயம் போல என்று போனில் தனது வருத்தத்தையும் பயத்தையும் தெரிவித்தவர் ராமு அத்தை
நான் என் வாழ்வில் எத்தனை உயரங்கள் தொட்டாலும் என் அம்மாவுக்கு அடுத்த படியா என் பசி போக்கி எனக்கு நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து சிறு வயதில் இருந்து இன்று வரை என் மேல் அதே கரிசனத்தையும் வாஞ்சையை வெளிப்படுத்தும் ராமு அத்தை என்றென்றும் என் நன்றிக்குறியவர்.
இன்று பிறந்தநாள் காணும் இரட்டையர்கள் ராமு அத்தைக்கும் லட்சுமி அத்தைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…. நோய் நொடி இன்றி வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்திக்கிறேன்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
25/08/2017



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner