அன்பின் தம்பி அப்துல்லாவுக்கு.....
வணக்கம் வாழிய நலம்....
இந்த கடிதத்தை அன்புள்ள தமிழ் பதிவுலகின் மல்லுவேட்டி மைனருக்கு,
என்றே ஆரம்பிக்க வேண்டும்....
நான் இந்த வலையுலகத்துக்கு வந்த போது என் பதிவுகளுக்கு புதுகை அப்துல்லா என்ற பெயிரில் நிறைய பின்னுட்டங்கள்.. யார் இவர் என்று பார்த்து இருக்கின்றேன்....
நேரில் சில முறைதான் சந்தித்து இருக்கின்றோம்....ஆனால் அப்போதும் என் எழுத்துகளை ரசிப்பது மட்டும் அல்லாமல் என்னை எப்போதும் உற்சாகபடுத்தும் நபர் நீங்கள்...
ஆனால் இதே வலையுலகில் என் எழுத்து பிழைகளை வைத்தும் என்னை பல வேறு விஷயங்களில் நக்கல் அடித்த போது, ஆமாய்யா.. எங்க அண்ணன் அப்படித்தான் எழுதுவார்... உங்களால் முடிஞ்சா படிங்க இல்லையா பொத்திகிட்டு போங்க என்று வேட்டியை மடித்து கட்டி நின்றவன் நீ...
போனவருடத்தில் வலையால், வலை நண்பர்களால் எனக்கு நிறைய நல்லவைகள் நடந்த போது பொறாமை இல்லாமல் போன் செய்து பாராட்டியவர் நீங்கள்...
வெகு நாட்களுக்கு பிறகே நீங்கள் அரசியலில் இருக்கின்றிர்கள் என்பதே எனக்கு தெரியும்.... அவ்வளவு ஏன்.. இந்த தேர்தல் எலக்ஷன் ரிசல்ட்டின் போதுதான் நீங்கள் எங்கு வேலை செய்கின்றீர்கள் என்பேதே எனக்கு தெரியும்....
உங்களை நான் கவனித்த போது... எந்த பிரச்சனையிலும் உங்கள் கோவத்தை அதிகம் வெளிபடுத்தியதே இல்லை..உங்களுக்கு இருக்கும் பின்புலத்துக்கு உங்கள் செல்வாக்கும் உங்கள் இடத்தில் நான் இருந்து இருந்தால் உங்கள் அளவுக்கு நான் நிதானத்தோடு நான் இருந்து இருப்பேனா என்பது தெரியாது.. உங்கள் நீதானத்துக்கு நான் ரசிகன்...
ராஜன் கல்யாணத்தின் போது நீங்கள், நான், டோன்டு, லக்கி,பேசிகொண்டு இருக்கும் போது பல பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து உங்கள் கருத்தை என்னிடத்தில் சொல்லிவிட்டு ஜாக்கியன்னே நீங்க எந்த விஷயத்தையும் பெரிசா எடுத்துக்காம நீங்க பாட்டுக்கு போயிகிட்டே இருங்க... என்று அட்வைஸ் செய்தாய்....
அதன் பிறகு புத்தககண்காட்சியில் என்னை பார்த்த போது.. ஜாக்கி அண்ணே உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கனும் எந்த புத்தகத்தை வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றாய்... நான் என்ன பரிசு? எதுக்கு என்றேன்.?? எடுத்துக்கொள்ளுங்கள் பிறகு சொல்கின்றேன் என்றாய்...பரிசு கொடுப்பவனே முடிவு செய்ய வேண்டும் என்றேன்...
என்னை அழைத்துக்கொண்டு சில பதிப்பகங்கள் அலைந்து எம்ஆர்ராதாவின் சிறைச்சாலை அனுபவங்கள் புத்தகத்தையும்...தமிழமகன் எழுதிய வெட்டுபுலி புத்தகத்தை பரிசளித்தாய்...
பரிசுக்கானகாரணத்தை கேட்டேன்.... அண்ணே இந்த பதிவுலகத்தில் பல வருடங்கள் இருந்து இருக்கின்றேன். பல பிரச்சனைகளில் சிக்கி இருக்கின்றேன்... நான் வந்த போது பதிவுலகில் வேற மெத்த படித்த ஒரு கூட்டம் இருந்தது...அவர்கள் நிரம்ப படித்தவர்கள்..
ஆனால் பத்தாவது படித்து விட்டு, எழுத்து பிழைகளோடு எழுதினாலும், வெளிப்படையாய் எழுதி இந்த இரண்டு வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கின்றீர்கள்..தமிழ் டைப் தெரியாமல், கம்யூட்டர் அறிவு இல்லாமல் இந்தளவு சாதிக்க முடிவது சாதாரணவிஷயம் இல்லை... என்று பாராட்டினாய்....
இது போல வெளிப்படையாய் யார் பாராட்டுவார்கள்... அந்த இரண்டு புத்தகங்ளோடு வீடு போய் என் மனைவியிடம் காட்டி அரைமணி நேரத்துக்கு அப்துல்லா புராணம் பாடினேன்.... என் மனைவி கேட்டாள்.. அவர் எங்கு வேலை செய்கின்றார்... தெரியாது? எத்தனை குழந்தைகள் தெரியாது.. இதுதான் என் பதில்....
எம்ஆராதா புத்தகத்தை எடுத்து சில பத்திகள் படித்து விட்டு வயிறு குலுங்க குலுங்க சிரித்து விட்டு உனக்கு போன் செய்தேன்.... நல்ல புததகம் தேர்ந்து எடுத்து கொடுத்த உனக்கு நன்றி கூறினேன்... நீ.. அண்ணே அந்த ஆளு உன்னைமாதிரியே ஒரு சேட்டக்காரன்னே என்று சொன்னாய் அதனால் தான் அந்த புத்தகம் வாங்கி பரிசளித்தேன் என்றாய்.....
சஞ்சய் திருமணம்...நான் மணடபத்துக்கு உள்ளே வந்ததும்.... இது ஜாக்கியண்ணே நான் சொல்லலை என்று உன் மனைவி குந்தைகளிடத்தில் என்னை அறிமுகபடுத்தி வைத்தாய்...உன் மகளை நான் ஒரு புகைபடம் என் கேமராவில் எடுத்துக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்... நான் மது அருந்தி இருந்த காரணத்தால் நான் போட்டோ எடுக்கவில்லை... ஆனால் வேறு ஒரு நாளில் நிச்சயம் எடுத்துக்கொடுப்பேன்..
அதன்பிறகு எங்களுக்கு யாழினி பிறந்த பிறகு வாழ்த்து தெரிவித்து விட்டு ஒன்று சொன்னாய்... அண்ணே பொம்பளை புள்ளைங்க சொர்கம் அண்ணே.... அம்மாக்கள் நன்றாக பார்த்துக்கொள்ளுவார்கள்.. வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும்.. பெண் பிள்ளைகள் அப்பா என்று வந்து ஒட்டிக்கொள்ளும் அந்த மகிழ்ச்சிக்கு இந்த உலகில் ஈடு இணையே இல்லை என்றாய்...இரண்டு மாதத்துக்கு பிறகு எங்கள் குழந்தை என்னிடத்தில் ஆ ஊஊ என்று பேசும் போது நீ சொன்னதின் அர்த்தம் உணர்கின்றேன்....
அப்துல்லா உன்னிடம் எனக்கு இன்னும் பிடித்த விஷயம் கள்ள மில்லா சிரிப்பு அது சிலருக்கே வாய்க்கும்.. சிலர் சிரிக்கும் போது கண்ணும் நேர்ந்து சிரிக்கும்.. உன் கண்ணும் அப்படித்தான்...நீ சிரிக்கும் போது இப்போது சிரிப்பு முடிய போகின்றது என்று நினைக்கும் போது அதையும் மீறி அந்த சிரிப்பு கொஞ்சம் இழுத்தபடி சிரிக்கும் அந்த கேவல் சிரிப்புக்கு நான் ரசிகன்....
எங்கோ பிறந்தோம் ஆனால் இந்த பதிவுலகின் காரணமாய் நாம் நண்பர்களானோம்...இந்த பதிவுலகத்துக்கு நன்றி..
உன் குடும்பத்தினருக்கும் என் அன்பும் கனிவும்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
===========
மேல் உள்ள கடிதம் பிளாக் காலத்தில் 2011 ஆம் ஆண்டு தம்பியண்ணன் அப்துல்லாவுக்கு எழுதிய கடிதம்...
கடிதம் எழுதும் வழக்கம் வழக்கு ஒழிந்த சூழலில் இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நான் எனது வலைதளத்தில் எழுதிய முதல் கடிதம் அப்துவுக்குதான்...
கடிதம் எழுதியது அன்றில் இருந்து இன்றுவரை அப்படியேதான் இருக்கின்றார்...
12 வருஷ பழக்கம்... இணையத்தில் பிளாக் காலத்தில் நான் கோலோச்சிக்கொண்டு இருக்கும் போது அப்துல்லா பழக்கம்.... பிளாக் ஆர்குட்டுன்னு சோசியல் மீடியா பெரிசா பட்டைய கிளப்பாத காலகட்டம்... சரியா எழுதறோமா... இல்லை தப்பா எழுதறோமான்னு வரும் பின்னுட்டங்களை வைத்து மட்டுமே முடிவு செய்துக்கொள்ள முடியும்... தம்பியண்ணன் அப்துல்லா பின்னுட்டத்துக்கு நான் ரசிகன்...
கடற்கரை பிளாக்கர் சந்திப்பில்தான் அப்து பழக்கம்... அவரு என்னை அண்ணன் அண்ணன்னு சொல்றதால நான் அண்ணன் நினைச்சிகிட்டு வாடா அப்து போடா அப்துன்னுலாம் பேசி இருக்கேன்..
ஏன்னா - அந்த ஆளு வயசை இன்னைக்கு வரைன்னு யாராலும் ஐட்ஸ் பண்ணவே முடியாது... எனக்கு எல்லாம் அப்ப கல்யாணம் ஆகவே இல்லை...யாரோ ஒருத்தர் பேச்சு பேராக்குல சொன்னார்... அப்துக்கு ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்குன்னு தூக்கி வாரி போட்டுச்சி...
அண்ணன் கூப்பிடறதால இப்படி வாடடா தம்பி போடா தம்பின்னு சொல்லிட்டமேன்னு நினைச்சி வருந்தி இருக்கேன்.... அண்ணையில் இருந்து இண்ணைக்கு வரைக்கு அப்துல்லா எனக்கு எப்பவுமே தம்பியண்ணன்தான்..
கலைஞர் பத்தி எதாவது உண்மைக்கு புறம்பா செய்திகள் வரும் போது போன் பண்ணி பேசி பேசி மனசை எத்தனையோ முறை அப்து லேசாக்கி இருக்காப்புள...
தானே புயல் சமயத்தில் சிங்கை நண்பர்கள் ரோஸ்விக் அனுப்பிய உதவியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கினோம்.. தினமும் பேசிக்கொள்ளும் நபர்கள் இல்லை... ஆனாலும் வேண்டும் நேரத்தில் வேண்டிய நேரத்தில் தம்பிண்ணன் டான்னு நிக்கறது அப்து ஸ்டைல்...
அப்து அத்தை பசங்க எல்லாம் கலைஞரை பார்க்கனும் சொல்றாங்க... தாராளமா பார்க்கலாம்ன்னா... கோபாலபுர இல்லத்தை பேப்பரில் செய்தியாக படித்தவர்களை அழைத்து சென்று தலைவர் இல்லத்தில் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள வைத்து எங்க அத்தை பசங்க வாழ்க்கையில் மறக்கவே முடியாத அந்ந காரியத்தை சாதிக்க நீ காரணமாய் இருந்தாய்...
மச்சான் ரிசப்ஷன்.. குடும்பத்தோடு வந்தாய்... குடும்பத்தோடு ஒரு நிகழ்ச்சிக்கு போய் நிக்கறது ரொம்ப ரேர் அண்ணே.... நீ எப்பயும் அதே ஸ்பெஷல்தான் அண்ணே என்று வந்து வாழ்த்திய போது மெய்சிலிர்த்தேன்.
திமுக கழக மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராகப் M.m. Abdulla தேர்ந்துஎடுக்கப்பட்டு இருக்கின்றார்... அவர் கழகவரலாற்றை அக்கு வேறு ஆணி வேறாக அலசுவதிலும் சரி... சர்க்காசமாக பதில் சொல்வதிலும் சரி அப்துக்கு நிகர் அப்துதான்.
கழக வேலைக்கு வேட்டி மடித்துக்கொண்டு களத்தில் இறங்கி வேலை செய்வதிலும் சரி... அப்துக்கு தற்போது கிடைத்து இருக்கும் பொறுப்பு மிக குறைவு என்பேன்..அவர் கழகத்தில் தொட்டு இருக்க வேண்டிய உயரங்கள் மிக பெரிதாய் இருந்து இருக்க வேண்டும்.... ஆனால் அவர் உழைப்புக்கு தற்போதைய பொறுப்பு கடுகு சைஸ்தான்... ஆனாலும் எந்த வேலையை கொடுத்தாலும் சுனக்கம் இல்லாமல் பீனிக்ஸ் பறவையாக கொடுத்த பொறுப்பை சிரத்தையோடு செய்து முடிக்கும் தம்பியண்ணன் அப்துக்கு வாழ்த்துகள்.
வாழ்த்தி மகிழும்...
அண்ணே பேசறவன்க பேசிக்கிட்டே இருப்பானுங்க.. உனக்கு என்ன தோனுதோ அதை செஞ்சிக்கிட்டு போய்கிட்டே இரு... நீ சேட்டக்காரன்னே.. நீயெல்லாம் ஜெயிப்ப என்று 12 வருடத்துக்கு முன் அப்து பேசிய வரிகள் எப்போதும் என் நினைவில் இருக்கும்
அன்பும் பேரன்பும்....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
ஜாக்கிசேகர் குடும்பத்தினர்.
ஜாக்கிசினிமாஸ்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

தொடரட்டும் உங்கள் அருமையான தோழமை
ReplyDelete