மகளீர் மட்டும் 2017 திரைவிமர்சனம்.





1994  ஆம் ஆண்டு பிப்பரவரி மாதம் 25 ஆம்  தேதி சென்னை  தேவி காம்ளக்சில் மகளீர் மட்டும் படம் பார்த்தேன்… வேலைக்கு செல்லும் பெண்களின் பிரச்சனைகளை  அந்த  படம் காமெடியாக  பேசியது.. முதல்காட்சியிலேயே  ஊர்வசி வேலைக்கு கிளம்புவார். அவருடைய கணவன் பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு… அந்த படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது கூட அவர்கிட்ட இரண்டு படம்   அசிஸ்டென்ட்டா வேலை பார்ப்பேன்  நினைச்சது கூட இல்லை.




23 வருஷம் கழிச்சி… அதே போல மூன்று பெண்கள்  அதே டைட்டில் பிரச்சனை மட்டும்  வேறு.. ஆதாவது அவர்கள்  திருமணத்திற்கு பின் அவர்கள்  சந்திக்கும் பிரச்சனையே மகளீர் மட்டும் 2017 திரைப்படம் அலசுகின்றது..
நான் கூட ஒரு ஸ்டேட்டஸ்  எழுதினேன்.   மனைவி ஊருக்கு போய் இருக்கும் வேளையில் மூன்று  நாள் கழுவாமல் இருக்கும் பால் பாத்திரத்தை மட்டும் கழுவினாள் போதும்.. சமையல் கட்டில்  நமக்காக இரவு பகலாக உழைக்கும் பெண்களை இன்னும் மதிப்போம் என்று எழுதி இருந்தேன்.


பானுப்பிரியா, ஊர்வசி,. சரண்யா.. மூவரும் சென்னை மயிலையில் பியூசி ஒன்றாக  படித்துக்கொண்டு இருக்கும் போது பிரிய நேர்கின்றது.. திருமணம் குழந்தை குட்டி என்று ஆன பிறகு பேஸ்புக் மூலம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.. அவர்கள்  ஒவ்வோருவரும் சந்தித்த பிரச்சனைகள் என்ன? என்பதை இந்த திரைப்படம் அலசுகின்றது.

பானுப்பிரியா பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு  மாடாக உழைக்கின்றார்  ஆனால்  சின்ன அங்கீகாரம் கூட  இல்லை… சரண்யாவுக்கு குடிகார கணவன் படுத்த படுக்கையான மாமியார், ஊர்வசிக்கு  கணவன் இல்லை… மூவரும் போட்டி போட்டுக்கொண்டு  நடித்து இருக்கின்றார்கள்..
 படிக்கும் போது மூன்று பெண்களில் ஊர்வசி  கதாபாத்திர பெண் மனதில் நிற்கின்றார்.

அந்த வின்டேஜ் காட்சிகள் அத்தனையும் அருமை..  ஆர்ட் டிப்பார்ட்மென்ட், காஸ்ட்யூம், கேமரா டிப்பார்ட்மென்ட் போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்து இருக்கின்றார்கள்.. மயிலை காமதேனு தியேட்டர் என்று வாழ்க்கையை ரீகால் செய்து இருக்கின்றார்கள்.

 படத்தில் வடநாட்டு போர்ஷன் ஒட்டவேயில்லை. ஆனாலும் வடநாட்டு பக்கம்தான் பெண்களை ரொம்ப  ரொம்ப அடிமையாக நடத்துவார்கள் என்பதால்  அந்த போர்ஷனை எடுத்துக்கொண்டு இருக்கலாம்..

அதே போல ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தில் செட் ஆன அளவுக்கு இந்த படத்தில் செட் ஆகாமல் துருத்திக்கொண்டு  தெரிகின்றார்.
 அதே நேரத்தில்  அவர்கள் மூவரையும் இணைக்க போராடும் வலுவான காரணத்தையும் சொல்லி இருக்க வேண்டும்…

 சரக்கு அடித்து விட்டு மூவரும் பாக்சிங் பன்ச் செய்வதை கூட  வெளிப்படையாக சொல்ல முடியாத அளவுக்குதான் தமிழ் சினிமா  இன்னும் இருக்கின்றது என்பது காலக்கொடுமை.

 பிரம்மா எழுதி இயக்கி இருக்கின்றார்.

குற்றம் கடிதல் திரைப்படம் போல போக்கஸ் இந்த திரைப்படத்தில் குறைவு கிடைத்த இடத்தில்  எல்லாம் பிரச்சார நெடி இருப்பது போன்ற ஒரு மாயை… என்ன நடக்க போகின்றது என்பதை படம் பார்க்கும் எல்லோரும் யூகிக்க வைக்கும்  சுவாரஸ்யமற்ற திரைக்கதை… அதே வேளையில் படம் பார்க்கும் ஆண் ச்சே இப்படி நாம நம்ம வீட்டு பெண்ணை நடத்தி இருக்கோமே என்று கண்டிப்பாக யோசிப்பான்..

 திருமணம் ஆகி குழந்தை குட்டி என்று தன்  வாழ்க்கையை இல்லறத்தில் தொலைத்து போன  அத்தனை பெண்களும் இந்த திரைப்படத்தோடு கமிட் ஆகிக்கொள்வார்கள்..

படத்தில்  ஜோ எடுக்கும் டாக்குமென்டிரி காட்சியில் ஒரு பெண் நீளமான  வசனம் பேசுவார் என்ன வீட்டுல சும்மா  இருக்கேன்னு சொல்றது என்று நான் ஒன்றும் சும்மா இல்லை என்று நீட்டி முழங்குவார்.. அந்த பெண்ணையும் அந்த வசனத்தையும் ரசித்தேன்.. படம் பார்க்கும் ஆண்களை நிச்சயம் அந்த கேள்வி  ஒரு உலுக்கு உலுக்கும் என்பது நிச்சயம்.

மகளீர் மட்டும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம்தான்… ஆனால்  இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தோடு சொல்லி இருக்கலாம் என்பதே நமது கருத்து.

 ரேட்டிங்3/5

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment: